தமிழகத்தில் இன்று
6-வது சுற்றில் ஆனந்த் எதிர்பாராத தோல்வி
டார்ட்மன்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியின் டார்ட்மன்ட் நகரில் நடந்து வரும் செஸ் போட்டியில், இந்தியாவின் கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், தனது ஆறாவது சுற்றுப் போட்டியில்ரஷிய வீரர் கிராம்னிக்கிடம் தோல்வியுற்றார்.
இந்தத் தோல்வியின் மூலம் முதல் நிலையில் இருந்து வரும் ஆனந்த்திற்குப் (4) போட்டியாக கிராம்னிக் (4), பீட்டர் லேகோ (4) ஆகியோர் வந்துவிட்டனர். இன்னொரு முக்கிய வீரரான இங்கிலாந்தின் மைக்கேல்ஆடம்ஸ் 3.5 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆனந்த் வெற்றி பெறும் நிலையில் இருந்தார். ஆனால் அவர் செய்த ஒரு தவறு, வெற்றியை அவரிடமிருந்து பறித்துக் கொண்டது. இந்தப்போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீரர் கூறுகையில், ஆனந்த் செய்த தவறு மிகவும் முட்டாள்தனமானது. 2-வது, 3-வது நிலையில் இருக்கும்வீரர்கள் போல அவர்கள் விளையாடவில்லை. இரு வீரர்களும் பல தவறுகளைச் செய்தனர். ஆனால் ஆனந்த் செய்த தவறு, அவருக்குத் தோல்வியைத் தேடித்தந்து விட்டது என்றார்.
ஆனந்த் இப்போட்டியில் மின்னல் வேகத்தில் விளையாடினார். இருப்பினும் 65-வது நகர்த்தலின்போது தடுமாறி விட்டார். கிராம்னிக் சுதாரித்துக்கொண்டார். வெற்றி அவர் பக்கம் சாய்ந்தது. இந்தப் போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு கூடுதல் ஈலோ புள்ளிகள்கிடைத்திருக்கும். தர வரிசையிலும் அவர் கிராம்னிக்கை முந்தியிருக்கலாம். அவரிடம் இழந்த 2-வது தர வரிசையையும் பெற்றிருக்க முடியும்.