தமிழகத்தில் இன்று
இரண்டாம் பக்கத் தொடர்ச்சி
கே: எவ்வளவு கிண்டல் அடித்தாலும் பொறுத்துக் கொள்கிறீர்கள்: கோபம் என்பது மருந்துக்குக் கூடவருவதில்லை. உங்களுக்கு இது எப்படி சாத்தியமாகிறது?
ப: எதுவும் உறைப்பதில்லை: எருமை மாட்டுத் தோல் என்கிறீர்கள். புரிகிறது. இதையும் பொறுத்துக் கொள்கிறீர்கள்.
கே: 2001 தேர்தலில் பா.ம.க. தனியாக, தனித்துப் போட்டியிட்டால், நிலை எப்படி இருக்கும்?
ப: மிகவும் நன்றாக இருக்கும்.
தி.மு,க., அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பா.ம.க. வை தங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை என்று கூறி த.மா.க.வும், பா.ம.க. இருக்கும்கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்று முடிவு செய்து விட்டால்தான் - பா.ம.க. தனித்துப் போட்டியிடும்.
அது தமிழக அரசியலில், ஜாதிப் பிடியை பெரிதும் தளர்த்தும். இது நடக்காது என்பதால் கற்பனை செய்து மகிழ வேண்டியதுதான்.
கே: வரப்போகும் சட்டசபை தேர்தலில் யாருடைய நிலைம பரிதாபமாக இருக்கப் போகிறது?
ப: நாம் ஒழங்கான முடிவைத்தான் அளிப்போம் - என்று நம்புகிறவர்கள், நமக்கு அடுத்த பரிதாபத்துக்குரியவர்கள் ஆவார்கள்.
கே: அரசியல்வாதிகள் கூறும் எல்லாவற்றுக்கும் உயர் அதிகாரிகள் ஆமாம் சாமி போடக் கூடாது - என்கிறாரே பிரதமர் வாஜ்பாய்...?
ப: மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கே: வாழப்பாடி ராமமூர்த்தியின் கட்சியில் இருந்து பலர் விலகி, காங்கிரசில் சேர்ந்து வருவது பற்றி...?
ப: அந்தக் கட்சியில் இவ்வளவு பேர் இருந்தார்களா? தன் கட்சியில் நிறைய பேர் இருப்பதாக வாழப்பாடி கூறி வந்ததில் கொஞ்சமாவது உண்மைஇருக்கும் போலிருக்கிறதே!
கே: பொருளாதார விஷயத்தில் பாரதிய ஜனதா - ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடு எதில் போய் முடியும்?
ப: சமாதானத்தில் முடியும். அரசு கொஞ்சம் விட்டுக் கொடுக்கும். ஆர்.எஸ்.எஸ்.அடக்கி வாசிக்கும்.
கே: பெண்களின் கண்ணீர் - சிறுகுறிப்பு வரைக!
ப: குழாய்: விரும்பியபோது திறந்துவிடவும், விரும்பாத போது மூடிவிடவும் கூடியது.
கே: ஒவ்வொரு நபரின் பெயருக்கு முன்னால் தந்தை பெயருடன் தாயின் பெயரையும் இன்ஷியலாக சேர்க்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் புதியகோரிக்கை பற்றி....?
ப: இருவரின் முப்பாட்டன், முப்பாட்டி, தாத்தா, பாட்டி.ஆகியோரின் பெயர்கள் என்ன பாவம் செய்தன.? அவர்கள் இல்லாவிட்டால் தந்தை ஏது? தாய்ஏது?
கே: இந்தியாவில் இரு கட்சிகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டால், நீங்கள் அதை ஆதரிப்பீர்களா, எதிர்ப்பீர்களா?
ப: ஆதரிப்பேன். இந்த மாதிரி ராட்சஸ சட்டங்களை ஆதரிக்க என்னை விட்டால் யார் கிடைப்பார்கள்?
கே: காலம் சென்ற ஜெபமணி குறித்து...?
ப: சிறந்த தேசியவாதி. காமராஜின் உண்மையான விசுவாசிகளில் ஒருவர். மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி பேசும் குணம் உடையவர். பல வருடகாலம் அரசியலில் இருந்தும் தனக்கென்று எதுவும் செய்து கொள்ளாத நேர்மையாளர்.
அவர் எழுதிய கண்டு கொள்வோம் கழகங்களை என்ற கட்டுரைத் தொடர் துக்ளக் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடையகுடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கே: காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு விட, கர்நாடக அரசு சம்மதித்திருக்கிறதே?
ப: ஜூன் மாதத்தில் விட வேண்டிய ஆறு டி.எம்.சி. நீரை, இப்போதாவது விடுவதற்கு கர்நாடகம் இசைந்தது நல்ல செய்தியே.
இதனால் காவிரி சிக்கல் தீர்ந்து விடப் போவதில்லை என்றாலும், ஒரு அங்குல முன்னேற்றம் கூட அரிதாக இருக்கும் பிரச்சனையில், கர்நாடகத்தின்பிடிவாதம் கொஞ்சம் தளர்ந்ததே கூட மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.