தமிழகத்தில் இன்று
ராணுவத்தில் நுழையும் பங்களாதேஷ் பெண்கள்
டாக்கா:
ராணுவத்தில் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று பங்களாதேஷ் அரசு அறிவித்ததுதான் தாமதம்.
நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் டாக்காவில் உள்ள ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு அலுவலகம் முன் நீண்டவரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர்.
முஸ்லிம் நாடான பங்களாதேஷில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே செல்வதென்றால் பர்தாஅணிந்துதான் செல்லவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. பெண்களுக்கு அரசாங்கத்தில் வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டன.
ஆனால், பெண்கள் இயக்கங்கள் மேற்கொண்ட போராட்டங்களின் பலனாக, அரசுப் பணிகளில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன் அடுத்தகட்டநடவடிக்கையாக கடுமையான ராணுவப் பணியிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ராணுவ பிரிகேடியர் இஷாக் இப்ராஹிம் கூறியதாவது:
ராணுவத்தில் 2000 பெண்களைத் தேர்வு செய்ய உள்ளோம். காலாட் பிரிவு மற்றும் துப்பாக்கிப் பிரிவுகளில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.பின்னர் படிப்படியாக, போர் முனையிலும் பெண்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
பங்களாதேஷ் ராணுவத்தில் மருத்துவப் பிரிவில் மட்டுமே சில பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போதுதான் முறையான ராணுவப் பணியில் பெண்கள்சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
முதற்கட்டமாக 30 இளநிலை அதிகாரிகள் பதவிக்குப் பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டாம் கட்டத் தேர்வு பின்னர் நடைபெறும்.தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு வழக்கமான ராணுவ சீருடை வழங்கப்படும் என்றார் இப்ராஹிம்.