தமிழகத்தில் இன்று
ராப்ரியை வெட்கப்படுத்திய "நாம் இருவர், நமக்கு இருவர்"
பாட்னா:
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொகைப் பெருக்கம் தொடர்பான கூட்டத்தில் மாநாட்டில் கலந்துகொள்ள பிகார் முதல்வர் ராப்ரி தேவி கலந்து கொள்ளவில்லை.
தேசிய மக்கள் தொகை கமிஷன் சார்பில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட இம் மாநாட்டில் மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், ராப்ரி தேவி கலந்து கொள்ளவில்லை. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற இம் மாநாட்டில் "நாம் இருவர்,நமக்கு இருவர்" என்ற குடும்பக் கட்டுப்பாட்டு முறையைப் பின்பற்றாத தாம் இம் மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி இல்லை என்ற எண்ணத்தில்அவர் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டார் ராப்ரி தேவி.
ஏனெனில் அவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மாநாட்டில் கலந்து கொண்டால் தர்மசங்கடமான நிலை ஏற்படலாம்என்று கருதியே மாநாட்டில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து விட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாகவே இத்தகைய மாநாட்டில் கலந்து கொள்வதை ராப்ரி தேவி தவிர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிகார் முதல்வராகஇருந்தபோது லல்லு பிரசாத் யாதவுக்கே இத்தகைய தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.
பிகார் சட்டப்பேரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான விவாதத்தில் இத்தகைய தர்மசங்கடத்தை லல்லு பிரசாத் யாதவ் சந்திக்கநேரிட்டது. ஆனால், தனது சமயோஜிதமான பதில்களால் அதைச் சமர்த்தியமாகத் தவிர்த்துவிட்டார்.
ஆனால், அத்தகைய புத்தி சாதுர்யமோ, சகஜமாக பேசும் திறனோ ராப்ரி தேவிக்கு இல்லை. இதனாலேயே டெல்லி மாநாட்டில் கலந்து கொள்ளாமல்அவர் தவிர்த்து விட்டார். அவருக்குப் பதிலாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சக்கீல் அகமது கலந்து கொண்டார்.
யு.என்.ஐ.