தமிழகத்தில் இன்று
மார்ச்சில் வருகிறது சட்டசபைத் தேர்தல்
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைக்கு கடந்த 1996 ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தது. அப்போது தி.மு.க, த.மா.கா, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துப்போட்டியிட்டு வெற்றிபெற்றன. தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம், 2001 ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் வரும் என்ற பேச்சு நீண்ட நாட்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இந்த நிலையில், சென்னை வந்திருந்ததேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி விமானநிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இயந்திரம் மூலம் ஓட்டுப்போடும் முறை கட்டாயமாக்கப்படும். தமிழகத்தில் இயந்திரம் மூலம்தான் ஓட்டுப்பதிவு நடக்கும்.
சென்னை, சேலம், ஈரோடு, வேலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இன்டர்நெட்மூலம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை இன்டர்நெட் மூலம் விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்த நான் தமிழகம் வந்துள்ளேன்.இதற்கான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடக்கும். அதில் கலந்து கொள்கிறேன் என்றார்.
சென்னை வந்துள்ள தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, தமிழக தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகளை வழங்குவதுதொடர்பாக திங்கள்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை ராயபுரம் சட்டசபை தொகுதிக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை 25-ம் தேதி தேர்தல் கமிஷனர் துவக்கி வைக்கிறார். காஞ்சிபுரம்மாவட்டத்தில் அச்சிறுபாக்கம் சட்டசபை தொகுதிக்கான அடையாள அட்டைகள் வழங்கும் பணியையும் 26-ம் தேதி அவர் தொடங்கி வைக்கிறார்.