தமிழகத்தில் இன்று
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவாரா வாஜ்பாய்?
வாஷிங்டன்:
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் உரை நிகழ்த்துவாரா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
செப்டம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை அமெரிக்காவில் பிரதமர் வாஜ்பாய் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது, அமெரிக்க நாடாளுமன்றத்தின்கூட்டுக் கூட்டத்தில் அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது உறுதியாகத் தெரியவில்லை.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் உரைநிகழ்த்துவது பற்றி நாடாளுமன்றம் தான் முடிவு செய்யவேண்டும். உரை நிகழ்த்துவது பற்றி நாங்களேஎதுவும் கேட்கக் கூடாது. அமெரிக்க நாடாளுமன்றம் அழைப்பு விடுக்கும்பட்சத்தில் பிரதமர் வாஜ்பாய் நிச்சயம் உரை நிகழ்த்துவார் என்றார் தேசியபாதுகாப்பு ஆலோசகரும், பிரதமரின் தலைமைச் செயலருமான பிரஜேஷ் மிஷ்ரா.
இதுவரை அமெரிக்க நாடாளுமன்றத்திலிருந்து எந்த அழைப்பும் வரவில்லை. பிரதமர் வாஜ்பாய் வருகையின்போது நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும்படி சபாநாயகரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இனி அடுத்து என்ன செய்வது என்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்றம்தான் முடிவு செய்யவேண்டும் என்றார் மிஷ்ரா.
பிரதமர் வாஜ்பாயின் உரை நிச்சயம் நடைபெற வேண்டும் என்ற ரீதியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுதொடர்பாக சபாநாயகர் டென்னிஸ் ஹாஸ்டெர்டுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு நாட்டின் தலைவரையும் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்க சபாநாயகருக்குத்தான் அதிகாரமும், உரிமையும் உள்ளது.ஆகவே, இந்த விஷயத்தில் சபாநாயகரை "வழிக்குக் கொண்டு வரும்" முயற்சியை தீவிரப்படுத்தும்படி நாடாளுமன்ற உறுப்பினர்களை தெற்காசியவிவகாரங்களுக்கான உதவிச் செயலர் கார்ல் இன்டர்ஃபர்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், இந்திய நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். அதற்குப் பதில்மரியாதை செலுத்தும் வகையில் இந்தியப் பிரதமரை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
1994-ம் ஆண்டு பி.வி. நரசிம்ம ராவ்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடைசியாக உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.