தமிழகத்தில் இன்று
வறுமைக்கு பெற்ற குழந்தைகளைப் பலி கொடுத்த தாய்
சேலம்:
சேலத்தில் வறுமையின் கொடுமையால் இரண்டு குழந்தைகளைத் தீ வைத்துக் கொன்ற தாய், தன் மீதும்மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார்.
சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே கோரிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஜெயந்தி(30). இவர்களுக்கு கோபி (7), அருணா (5), தேவி (10) ஆகிய மூன்று குழந்தைகள் இருந்தனர்.
இவர்கள் குடும்பம் வறுமையினால் வாடி வந்தது. இதனால், கணேசன் சம்பாதிப்பதற்காக வெளியூர் சென்றுவிட்டார். அவர் குடும்பச் செலவுக்குப் பணம் அனுப்பாததால், ஜெயந்தி குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்திசெய்ய மிகவும் சிரமப்பட்டார். அக்கம் பக்கத்தில் கடன் பெற்று, சிறிது நாட்களைக் கடத்தினார்.
அருகில் இருந்த பஞ்சாயத்து ஆபீசில் வேலை பார்த்து வந்த ஜெயந்தி, உடல்நலக் குறைவால் அந்த வேலையையும்விட்டு விட்டார். வறுமையால் வாடிய ஜெயந்தி குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
எனவே, வியாழக்கிழமை இரவு 3 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றினார். அப்போது விழித்துக்கொண்ட மகன் கோபி, வெளியே ஓடி விட்டான். இரண்டு குழந்தைகள் மீதும் தீ வைத்து விட்டு, தன் மீதும்மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஜெயந்தி.
3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தோர், தீயை அணைத்து, 3 பேரையும் மருத்துவமனையில்சேர்த்தனர். ஆனால், இதில் இரண்டு குழந்தைகளும் இறந்தன. ஜெயந்தி அபாயக் கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகிறார்.