இந்த வாரம்
காஷ்மீரில் 80 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் ஆறு இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 32 அமர்நாத் யாத்ரீகர்கள், 25 பீகார்தொழிலாளர்கள் உள்பட 80 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
மாநிலம் முழுவதும் அசாதாரண நிலை நிலவுவதால் ஜம்மு, உதம்பூர், கதுவா, பூஞ்ச், ரஜோரி மற்றும் மாநிலம் முழுவதிலும் பல பகுதிகளில்காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாஹல்ஹாம் ராணுவ முகாம் உள்ள ஆரூ பாலம் அருகே சென்று கொண்டிருந்த அமர்நாத் யாத்ரீகர்கள் மீது திடீரென்று வந்த தீவிரவாதிகள் சரமாரியாகத்தானியங்கித் துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் அங்கேயே 32 யாத்ரீகர்கள் இறந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள். 2 பேர் குழந்தைகள். 2 பேர்போலீஸ்காரர்கள். அனைவரும் பனி லிங்கத்தைச் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தவர்கள்.
பாதுகாப்புப் படையினர் திருப்பிச் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் 35 பேர் குண்டுக் காயமடைந்தனர்.
இதேபோல, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் குவாசிகண்ட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத வெளிநாட்டுத் தீவிரவாதிகள் சுட்டதில் 18பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டம், அச்சாபல் பகுதியில் ஏழு தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
11 காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை:
புதன்கிழமை காலையில் நடந்த சம்பவத்தில் 11 காஷ்மீர் பண்டிட்டுகளை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அனந்த்நாக் மாவட்டம், போகல்பரிஷ்தான் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
மற்றொரு சம்பவத்தில், பாதுகாப்புப் படை வீரர்களிடம் சரண் அடைந்த முன்னாள் தீவிரவாதி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்ததீவிரவாதியின் தாத்தா அப்துல் கனி கனாய், பெற்றோர் அப்துல் அகமது, மனைவி மெமகபூபா, சகோதரர் ஸாஹூர் அகமது, சகோதரி ஷபிகாஆகியோரை சரமாரியாகக் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் படுகொலைச் சம்பவங்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பகுதியில் அமைதியைநிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு இது இடையூறு செய்வதாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சமீபத்தில்தான், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் மூன்று மாத போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இதையடுத்து இந்திய அரசும், ஹிஸ்புல் தீவிரவாதிகளுக்குஎதிரான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இதற்கு ஹர்கர் உல் முஜாஹிதீன், ஜமாத் உல் முஜாஹிதீன், ஜெய்ஸ் இ முகம்மது மற்றும் லாஷ்கர் இதொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
யு.என்.ஐ.