காவிரிப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கிறார் வீரப்பன்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், காவிரிப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வீரப்பன் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் நிபந்தனைகள் அடங்கிய இரண்டு கேசட்டுகள் தமிழக அரசுக்கு வந்துள்ளது. வீரப்பனிடமிருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவில்வந்த இரு கேசட்டுகளும் முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து கருணாநிதி கூறுகையில், ஒரு கேசட் கர்நாடக முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அது உடனடியாக பெங்களூருக்கு அனுப்பப்பட்டது. அந்த கேஸட்டைக்கேட்ட கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, அந்த கேஸட்டில் வீரப்பன் கூறியுள்ள கோரிக்கைகள் குறித்து என்னுடன் பேச்சு நடந்த விரும்புவதாகக் கூறினார்.ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நாங்கள் இருவரும் சந்தித்துப் பேசுகிறோம்.
வீரப்பன் அனுப்பிய கேஸட்டில் பல கோரிக்கைகள் உள்ளன. அவற்றை இப்போதைக்குத் தெரிவிக்க முடியாது. கர்நாடக முதல்வருடன் ஞாயிற்றுக்கிழமைநடைபெறும் பேச்சில் இக் கோரிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்துவோம்.
வீரப்பனைச் சந்திக்கச் சென்றுள்ள நக்கீரன் கோபால் இன்னும், வீரப்பனைச் சந்திக்கவில்லை. சனிக்கிழமை அவர் வீரப்பனைச் சந்திப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது என்றார் கருணாநிதி.
இந்த கேசட்டுகளில் உள்ள விவரங்கள் குறித்துத் தமிழக முதல்வர் கருணாநிதியும் கர்நாடகமுதல்வர் கிருஷ்ணாவும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமைஆலோசனை நடத்துகின்றனர்.
வீரப்பன் அனுப்பியுள்ள கேஸட்டுகளில் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். பொது வாழ்க்கைக்குத் திரும்ப ஆசைப்படுகிறேன். காவிரியில் கர்நாடகஅரசு தண்ணீர் திறந்து விடவேண்டும். மைசூர் சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வீரப்பன்கூறியிருப்பதாகத் தெரிகிறது.
எப்படி வந்தது கேசட்?
கேசட் எப்படி வந்தது என்பதில் மறுபடியும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில், வெள்ளிக்கிழமை மாலை வீரப்பனை கோபால் சந்தித்ததாகவும்,வீரப்பனின் கோரிக்கைகள் அடங்கிய கேஸட்டுகளை கோபால் பெற்று தனது டிரைவர் பாலு மூலம் சென்னைக்குக் கொடுத்தனுப்பியதாகவும்கூறப்படுகிறது.
அந்த கேஸட்டை நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் கேட்டுவிட்டு பின்னர் கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் வீட்டுக்குச் சென்று முதல்வர் கருணாநிதியிடம்அந்த கேஸட்டைக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இத் தகவலை தனது பேட்டியின்போது முதல்வர் கருணாநிதி உறுதி செய்யவில்லை. வீரப்பனிடமிருந்து நேரே அரசுக்கு இரு கேஸட்டுகள்வந்ததாகவே அவர் கூறினார்.
வீரப்பனிடமிருந்து கேஸட் வந்ததை அடுத்து அது பற்றி தலைமைச் செயலர், உள்துறைச் செயலர் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருடன் முதல்வர்ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களை டி.ஜி.பி .சர்மா சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தனது ஆள் மூலம் கேஸட்டுகளை வீரப்பன் கொடுத்தனுப்பியுள்ளான். அந்த கேஸட்டைக் கொண்டு வந்த நபர் பற்றிய விவரம் தெரியவில்லை. எந்தகேஸட்டில் என்ன கோரிக்கைகள் உள்ளன என்றுதெரியவில்லை.
வீரப்பன் விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகள் பற்றியும் உடனுக்குடன் மத்திய அரசுக்குத் தகவல் தரப்பட்டு வருகிறது. கேஸட்டில் வீரப்பன்கூறியுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பதை இப்போதைக்குத் தெரிவிக்கமுடியாது. வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமார் நிச்சயம்மீட்கப்படுவார் என்றார் சர்மா.