"வல்லரசு இந்தியாவுடன் நல்ல உறவு .... கூறுகிறது பிரான்ஸ்
பாரிஸ்:
இந்தியா, பிரான்சுக்கிடையே திருப்திகரமான உறவு நிலவுவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இந்த வாரத் தொடக்கத்தில் இந்தியா- பிரான்ஸ் நாட்டு உயர்மட்டக் குழுவினருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது. சர்வதேசபிரச்சினைகள் மற்றும் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் சீர்திருத்தம், ஐரோப்பிய கண்டத்திற்கான பொதுவான பாதுகாப்புத் திட்டம், ஜி.8 நாடுகளின் மாநாடு,பால்கன் பிரச்சனை மற்றும் அணுஆயுதங்கள் குறித்து இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் விவாதித்தனர்.
இந்தியா சார்பில் பிரதமர் வாஜ்பாயின் முதன்மை செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான பிரிஜேஷ் மிஸ்ரா, பிரான்ஸ் தரப்பில் அதிபர் ஜேக்கஸ்சிராக்கின் சிறப்புத் தூதர் ஜெராடு எரேரா தலைமையிலான குழு இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பெர்னார்டு வலேரோ கூறுகையில், இப் பேச்சுவார்த்தை முக்கியமானது.சிறப்புவாய்ந்தது. இதனால் இருநாடுகளின் உறவும் மேலும் வலுபெறும் என்று பிரான்ஸ் நம்புகிறது என்றார்.
பேச்சுவார்த்தையில் காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை, எல்லைக்கட்டுப்பாட்டில் உள்ள நிலவரம், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளபோர்நிறுத்தம் ஆகியவை குறித்து பிரான்ஸுடன் இந்தியா விவாதித்தது.
தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் சேர்ந்து செயல்படவும் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தரஇடம் கிடைப்பதற்கு பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில் நடந்த இப்பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம்வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதே போல, இந்தியா மிகப்பெரிய சக்தியாக வந்து கொண்டிருப்பதால், பிரான்சுக்கும் இப்பேச்சுவார்த்தை முக்கியமானதாக இருந்தது. இருநாடுகளும்மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரான்சில் சந்தித்துப் பேசவுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.