வதந்திகளை நம்பாதீர் ....பெங்களூர் போலீஸ் கமிஷனர்
பெங்களூர்:
வீரப்பன் கோரிக்கைகள் குறித்து பெங்களூரில் கிளம்பியுள்ள வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் மடியாள் கூறினார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து சனிக்கிழமை இரண்டு கேசட்டுகள் வந்தன. இதில் நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால் பலகோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வீரப்பன் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
வீரப்பன் விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து நகரில் பலவாறு வதந்திகள் கிளம்பின. இதையடுத்து மாகடி ரோடு, கே.ஆர்.மார்க்கெட், ராஜாஜி நகர்,மல்லேஸ்வரம், விஜயநகர் உள்பட பல பகுதிகளில் சில கும்பல் கடைகளை அடைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியது.
இதையடுத்து கமிஷனர் மடியாள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பெங்களூரில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. வீண் வதந்திகளைப்பரப்புபவர்களைப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நகரில் கலாட்டா நடப்பதாகத் தெரிய வந்தால் உடனடியாக நகர போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். வீண் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம் என்றார்.
டி.ஜி.பி.தினகர் கூறுகையில், பெங்களூர் மிகவும் அமைதியாக உள்ளது. எந்தக் கலவரமும் இல்லை என்றார்.