நிஜலிங்கப்பா மரணம்
பெங்களூர்:
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.நிஜலிங்கப்பா சித்ரதுர்காவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 98.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் சித்தவனஹள்ளி கிராமத்தில் 1902 ம் ஆண்டு டிசம்பர் 10 தேதி பிறந்தவர் நிஜலிங்கப்பா. பி.ஏ. பட்டம் பெற்றஇவர் எல்எல்பி பயின்று வழக்கறிஞரானார். அதற்குப்பின் அரசியலில் கொண்ட ஆர்வம் காரணமாக அரசியலில் இறங்கினார்.
மூத்த காங்கிரஸ் உறுப்பினரான நிஜலிங்கப்பா 1965 ல் கர்நாடக மாநில முதல்வராகப் பதவி ஏற்றார். பின்னர் இவர் 1968 ல் தனது முதல்வர் பதவியைராஜினாமா செய்தார். சில ஆண்டுகளுக்குப் பின் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றபின் தனது சொந்த ஊரான சித்தவனஹள்ளியில் வசித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் இவர் தன் வீட்டில் கால்தவறிக் கீழே விழுந்தார். சிகிச்சைக்காக பெங்களூர் பவுரிங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தீவிரசிகிச்சைப்பிரிவில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சில நாட்கள் கழிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் மரணமடைந்தார்.
அண்மையில் கர்நாடக அரசின் மிகச் சிறந்த விருதான கர்நாடக ரத்னா என்ற விருதை கர்நாடக அரசு அவருக்கு வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸின் முதல் அதிருப்தியாளர்
நிஜலிங்கப்பாவை காங்கிரஸின் முதல் அதிருப்தியாளர் எனலாம். 1969-ல் அகில இந்திய காங்கிரஸ் முதல் முறையாக உடைந்தது. அதற்கு மூலகாரணமாக கூறப்பட்டவர் நிஜலிங்கப்பா.
இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறினார் நிஜலிங்கப்பா. அதற்குப் பிறகு நடந்த தேர்தலில்இந்திரா காங்கிரஸ் பசு, கன்று சின்னத்திலும், நிஜலிங்கப்பா காங்கிரஸ் ராட்டை சின்னத்திலும் போட்டியிட்டன.
ஒருங்கிணைந்த கர்நாடகத்தை உருவாக்கியதில் நிஜலிங்கப்பாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தின் முதல்வராக இருந்தபோது பல நலத் திட்டங்களைநிறைவேற்றியுள்ளார்.
சிறந்த வழக்கறிஞரான நிஜலிங்கப்பா பல விஷயங்களைக் கற்றுத் தேர்ந்தவர். தனது தள்ளாத வயதிலும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை மறைந்த ராஜேஷ்பைலட்டைத் தலைவராகக் கொண்டு நடத்தி வந்தார்.
பெருந்தலைவர் காமராஜரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர் நிஜலிங்கப்பா. அவரது மறைவு கர்நாடகத்திற்கு மட்டுமல்லாது, இந்திய அரசியலுக்கும்,சட்டத் துறைக்கும் பெரிய இழப்பாகும்.












Click it and Unblock the Notifications