கர்நாடக மக்கள் அமைதி காத்திட கருணாநிதி வேண்டுகோள்
சென்னை:
கடத்திச் செல்லப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்களும் நலமாக இருப்பதால் கர்நாடக மக்கள் அனைவரும் அமைதி காத்திடவேண்டுமென்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருமாநில அரசுகளின் சார்பில் நக்கீரன் கோபால் காட்டுக்குத் தூதராகச் சென்றுள்ளார். அவர் நிருபர் சிவசுப்ரமணியம் மூலம் கொடுத்தனுப்பிய கேசட்புதன்கிழமை நள்ளிரவு சென்னை வந்தது.
அந்தக் கேசட்டைக் கேட்ட முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
காட்டுக்குக் கடத்திச் செல்லப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூன்று பேரும் நலமுடன் இருப்பதாகவும், யாரும்பதற்றமடையாமல் இருக்க வேண்டுமென்றும் நடிகர் ராஜ்குமார் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் பேசியுள்ள ஒலிநாடா கிடைத்துள்ளது.
அது கவலையடைந்துள்ள அனைவருக்கும் ஆறுதலாக அமைந்துள்ளது. அவர்களைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படஉறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
ஓரிரு நாட்கள் தாமதமானாலும் கர்நாடகத்தில் உள்ள மக்களும், ராஜ்குமாரின் ரசிகர்களும் நம்பிக்கையுடன் அமைதி காத்திட வேண்டுமென்றுகேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தமிழக முதல்வர் தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக வர்த்தக சபை:
கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தும்,அவரை உடனடியாக மீட்பதற்கு ஆவன செய்யுமாறும், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையினர் வியாழக்கிழமை தமிழக முதல்வரைச் சந்தித்துகேட்டுக்கொண்ட போது, அதற்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி விரிவாக எடுத்துரைத்தார்.
கமலஹாசன் சந்திப்பு:
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் நிர்வாகிகள் மற்றும் திரைப்பட கலைஞர்கள், கமல்ஹாசன்,ஏ.வி.எம்.சரவணன், எல்.சுரேஷ், கேயார், சுதர்சன் சீனிவாசன், கே.என்.வெங்கடேஸ்வரன், வி.எல்.சாஸ்த்திரி, எஸ்.வி.ராஜேந்திர சிங் பாபு, அம்பரீஷ்,சுந்தர்ராஜ், அசோக், முக்கியமந்திரி சந்துரு எம்.எல்.சி, ஆர்.லட்சுமண், ஜெயமாலா, ஜெயந்தி, வெங்கடேஷ், ஏ.எஸ்.மோகன், துவாரகேஷ், சேட்டன்,கிரிஷ், ஒய்.குப்புசாமி, கே.பாலகிருஷ்ணன், எம்.ராமலிங்கம், என்.பாபு, பிரமீளா, ஜோஷ்யா, ஜெயஸ்ரீதேவி, பார்கவி ஆகிய திரைப்பட கலைஞர்கள் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தனர்.