புத்த பிட்சுக்களுடன் புதிய பிரதமர் விக்ரமநாயகே ஆலோசனை
கொழும்பு:
இலங்கையின் புதிய பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே, வரவுள்ள பொதுத்தேர்தல் மற்றும் புதிய அரசியல் சட்ட திருத்தம் ஆகியவை குறித்து புத்தபிட்சுக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தலைநகர் கொழும்பில் பிரதமர் விக்ரமநாயகே அஸ்திரியா, மஹாநாயகே, ஜனதா விமுக்தி பெரமுனா ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த புத்த மதக் குருக்களைச்சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த வியாழக்கிழமை பண்டாரநாயகா தனது உடல்நிலை காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின் விக்ரமநாயகே புதிய பிரதமராகப்பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் உள்ள 18.5 மில்லியன் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களே. நவம்பரில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில்சந்திரிகாவின் மக்கள் கட்சி மீண்டும் பதவிக்கு வர வேண்டுமெனில் பெரும்பாலான புத்த மதத்தினரின் வாக்குகள் தேவை.
இந்த நிலையில் பிரதமர் விக்ரமநாயகே, புதிய அரசியல் திருத்தம் குறித்து புத்த மதக் குருமார்களின் ஆலோசனையைக் கேட்டறிந்தார். மேலும் இதுகுறித்து விரிவாக ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. பின்னர் புதிய அரசியல் சட்டதிருத்தத்தில் எந்தெந்த இடத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என்பது குறித்துவிவாதித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
அதே போல் புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவை நிறைவேற்ற புத்த பிட்சுக்களின் ஆதரவு தேவை. மேலும் பொதுத்தேர்தலுக்கு முன் இலங்கையில்புதிய அரசியல் சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்படாது. ஏனெனில் ஆகஸ்ட் 24 ம் தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து விடலாம்என்று சந்திரிகா அரசு தீர்மானித்துள்ளது என்றார்.
முன்னதாக இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையிலும், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும்வகையிலும் புதிய அரசியல் சட்ட திருத்தத்தை நிறைவேற்றத் தீர்மானித்திருந்தார் அதிபர் சந்திரிகா.
ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, பிளாட், டி.யூ.எல்.எஃப் மற்றும் புத்த பிட்சுக்கள் புதியஅரசியல் சட்ட திருத்த மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.
மசோதாவை நிறைவேற்றுவதில் சந்திரிகா அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால் சந்திரிகாகட்சியில் 111 எம்.பி.க்களே இருந்தனர்.
இதனால் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து அதிபர் சந்திரிகா கூறுகையில், மசோதா மீதான வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது தற்காலிகமான பின்னடைவுதான். பொதுத்தேர்தலுக்குப்பின் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையில் முழு மூச்சுடன் இறங்கி விட்டன. நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
ராய்ட்டர்ஸ்