பயம்மா இருக்கு!...அம்மன் படத்திற்கு தடை கோரி வழக்கு
சென்னை:
தமிழ் சினிமாவின் சென்டிமென்ட் படங்களுக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் விட்டது. தாலி, கோவில் என்று அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது மறுபடியும் சாமி, அம்மன் என்கிற வேடங்களில் கதாநாயகிகள் வந்து பதட்டத்தையும், பயத்தையும் தமிழ் சினிமாவில்ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இந்த அம்மன் படங்கள் சம்பந்தமாக சமீபத்தில் சென்னையில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கண்திறந்து பாரம்மா என்ற பக்திப்படம் சமீபத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தில் அம்மன் வேடத்தில் நடிகை இந்துநடித்துள்ளார்.
கதாநாயகியாக சங்கீதா, கதாநாயகனாக ரஞ்சித், வில்லனாக தினேஷ், வில்லியாக ஒய்.விஜயா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.சி. லீலாவதி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில்வழக்கு தொடர்ந்துள்ளனர்.
லீலாவதி தாக்கல் செய்த மனுவில், கண் திறந்து பாரம்மா படத்தை பார்த்தேன். படம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.நாக்கில் அலகு குத்துவது, வாயில் கற்பூரம் விழுங்குவது, அம்மனாக நடிக்கும் இந்து வில்லனின் கை, கால், தலையை கத்தியால்வெட்டுவது போன்ற காட்சிகள் அதிர்ச்சியையே அளிக்கின்றன.
கை, கால்களை வெட்டும்போது, ரத்தம் பீறிட்டு வருவது போன்ற காட்சிகள் அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.
மூடநம்பிக்கையை வளர்ப்பது போலவும், அச்சம் வரவழைப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கும் கருத்தை சொல்லும் படமாக அது இருக்கிறது. எனவே அந்த படத்துக்கு உடனே தடை விதிக்கவேண்டும். குறிப்பிட்ட சில காட்சிகளை உடனே நீக்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த வழக்கில் லீலாவதி கூறியுள்ளார். விரைவில் அந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.