தமிழ் ஆட்சிமொழி, காவிரி பிரச்சனை: வீரப்பனின் நிபந்தனைகளை நிராகரித்தது கர்நாடகம்
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் இரண்டு கோரிக்கைகளை கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நிராகரித்தார்.
கர்நாடகத்தில் தமிழை இரண்டாவது ஆட்சி மொழியாக்க வேண்டும். காவிரிப் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்துக்கு விட வேண்டும்ஆகிய இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
முதல்வர் கிருஷ்ணா சனிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் எப்படி கன்னடத்தை ஆட்சி மொழி ஆக்க முடியாதோ அதே போல்தான் கர்நாடகத்திலும் தமிழை ஆட்சிமொழியாக்கமுடியாது.
இந்தக் கோரிக்கையைப் பொறுத்த மட்டில் மத்திய அரசின் மொழி சிறுபான்மையோர் நலன் காக்கும் விரிவான தேர்வு கொள்கைஎல்லா மாநிலத்துக்கும் பொருந்தும். இதே விஷயத்தில் சில மாநிலங்களில் கன்னடர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு மாநில அரசுகளுக்கும் 19 ம் தேதி வரை வீரப்பன் கெடு விதித்திருப்பதாகக் கூறப்படுவது சரியல்ல.
19 ம் தேதிக்குள் கோரிக்கைகளுக்கு சரியான பதிலைத் தெரிவிக்க வேண்டும் என்று தான் வீரப்பன் கூறியிருக்கிறான்.
நடைமுறைக்கு சாத்தியப்படாத இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது.
வீரப்பன் கோரிக்கைகள் பற்றி கர்நாடக அரசு எல்லா தகவல்களையும் சேகரித்து வருகிறது.
இதில் தடா வழக்குகளை வாபஸ் பெறுவது, 91, 92 ம் ஆண்டுகளில் காவிரி கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுவழங்குவது போன்றவைகளும் அடங்கும்.
அடுத்ததாக வீரப்பன் கூறுவது போன்று காவிரி நதிநீர் பிரச்சனையை சர்வதேச நீதிமன்றத்துக்கு விட முடியாது என்று ஏற்கனவே தமிழகஅரசு கூறிவிட்டது. காவிரி நீர் பிரச்சனையில் தமிழ்நாடு, கர்நாடகா மட்டுமே சம்பந்தப்படவில்லை. பாண்டிச்சேரி, கேரளமாநிலங்களுக்கும் இப்பிரச்சனையில் பங்கு உண்டு.
அதனால் சுலபமாக காவிரி நீர் ஆணையத்தைக் கலைத்து விட முடியாது. ஆணையம் தொடர்ந்து இருக்க வேண்டும். காவிரி ஆணையத்தின்மூலம் நான்கு மாநிலங்களுக்கும் நீதி கிடைக்கும்.
இதனால் வீரப்பனின் இந்த இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. வீரப்பனின் மற்ற கோரிக்கைகள்ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வீரப்பன் கேட்டுக்கொண்ட படி மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 51 கைதிகளை விடுவிக்க கர்நாடக அரசு அனைத்து முயற்சிகளையும்எடுத்து வருகிறது.
கோலார் மாவட்டம் கம்பல பள்ளியில் 7 பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலாஒன்றரை லட்சம் நஷ்டஈடு வழங்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடு கோபிசெட்டி பாளையம், கொளத்தூர் தாக்குதல் சம்பவம் பற்றி சாட்சிகள் விசாரணை முடிந்து விட்டது.
விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்தபின் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். கர்நாடகத்தில் காவிரி கலவரம் தொடர்பாகஇறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 2 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் திருவள்ளுவர் சிலை அமைக்க நாள் குறிக்கப்படும். கர்நாட மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசின் நெறிமுறைகளை மாநில அரசு பயன்படுத்தி வருகிறது.
வீரப்பனின் கோரிக்கைகளுக்கான பதில்கள், மற்றும் அது குறித்த விவரங்கள் அடங்கிய நகல்கள் உயர் போலீஸ் அதிகாரிசீனிவாசன் மூலம் கோபாலிடம் சேர்பிக்கப்படும் என்றார் கிருஷ்ணா.