வலிகளை இனி நாம் சுமப்போம்!
இது ரோஜாக்களை துப்பாக்கிகள் வணங்கிய நாள்
வன்முறையை அகிம்சை அடக்கிக் காட்டிய அதிசயம்
குண்டுகளுக்கு மனிதாபிமானம் போதிக்கும் இந்தத்
தேசம்உயிர்களை எடுத்து அல்ல,
உயிர்களைக் கொடுத்துத் தான் சுதந்திரம் வென்றது.
ஒரு நூற்றாண்டு இருளை ஒரு இரவில் விரட்டியது சுதந்திரம்
ஆனால், போராடிக் கிடைத்த சுதந்திரத்தை நாம்
விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம்
திணறடிக்கும் மக்கள் தொகை
மூச்சு முட்ட வைக்கும் சாதிகள்
குட்டிச் சுவர் அரசியல்
சுய நலத் தலைவர்கள்
ஊழல் ஊற்றுக்கள்
பந்த், கல்வீச்சு, வெடிகுண்டு, ஊர்வலம், பசி
வேலை நிறுத்தம், சாதிச் சண்டை, மதக் கலவரம்
போதும்!
போதிய மட்டும் காயம்பட்டுவிட்டது இந்தியா
ஆனாலும், இதையெல்லாம் ஒரு மெல்லிய புன்னகையோடு
தான் தாங்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தேசம்
வா,
காயம்பட்ட தேசத்தின் ரத்தம் துடைப்போம்
கண்ணீர் பார்க்கும் தாய்நாட்டின் விழி ஈரம் போக்குவோம்
வலிகளை இனி நாம் சுமப்போம்
வெற்றிகளை மட்டும் தாயின் மடியில் வைப்போம்!.