சுட்டுத் தள்ளுங்கள் வீரப்பனை .. ஜெ. ஆவேசம்
சென்னை:
காட்டுக்குள் அதிரடிப் படையை அனுப்பி வீரப்பனை சுட்டுத் தள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆவேச ஆலோசனைகூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயலலிதா திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
சந்தன மரக் கடத்தல்காரன் என்கிற கொடிய கொலைகாரன் 16 நாட்களாக இரண்டு மாநில அரசுகளையே ஆட்டி படைத்து வருகிறான்.
நடிகர் ராஜ்குமார் பாதுகாப்புக்கும், விடுதலைக்கான முயற்சிக்கும் எந்தவிதமான குந்தகம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால் தான் இதுவரைநான் எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் சாதித்தேன்.
ஆனால், வீரப்பனின் கோரிக்கைகளுக்குத் தமிழக, கர்நாடக முதல்வர்கள் கோழைத்தனமாக சரணடைந்து வருகிற கேவலமான காட்சி இதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை உண்டாக்கி இருக்கிறது.
எனவே இரு மாநில அரசுகளின் கோழைத்தனமான செய்கைகள் பற்றி கருத்துக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயகத்திற்கு அடையாளமாக சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தத் தவறிய இரண்டு மாநில அரசுகளும் நீடிப்பது இனியும் தேவை தானா என்றகேள்வி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது.
கடத்தல் நாடகம் நடந்து வரும் வேளையில் இரண்டு மாநிலங்களின் காவல்துறை மற்றும் அதிரடி படையினரின் கைகள் கட்டப்பட்டு அவர்கள்செயல்படாமல் தடுக்கப்பட்டிருப்பதும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்ற விடாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதும் வேதனைக்குரியது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தமிழ் தேசிய விடுதலைப் படை மற்றும் தமிழ் தேசிய மீட்புப் படை ஆகிய அமைப்புகளின் கூட்டாளியாக வீரப்பன் இப்போதுஇருக்கிறான்.
கடத்தல் நாடகத்தின் நிலைமை முற்றி 16 நாட்களாக இழுத்தடிக்கப்படுவதைப் பார்த்தால் ராஜ்குமாரும், மற்றவர்களும் விரைவில் விடுதலை ஆகப்போவதாகத் தெரியவில்லை.
அவர்களை விடுவிக்க இது சரியான வழியல்ல. இரண்டு மாநில போலீசாரும், அதிரடிப் படையும் அதிரடி நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்தால்இந்நேரம் பிரச்னையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.
வீரப்பனின் குற்றப் பட்டியல் சொல்லி மாளாதது. காவல் துறை உயரதிகாரிகள், காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட 130 பேரையும், 2ஆயிரம் யானைகளையும் கொன்றவன். சந்தன மரங்களை வெட்டியவன். அவனைச் சுட்டுத் தள்ள வேண்டும்.
இந்த கொடியவனை இரக்க சுபாவம் உள்ளவன் என்று பாராட்டுவதும், தமிழ் தியாகியாக வர்ணிப்பதும் மிக மிகக் கேவலமான பொறுப்பற்றசெயலாகும்.
ராஜ்குமாரை மீட்க சினிமா நட்சத்திரங்கள் காட்டுக்குள் செல்லப் போவதாக அறிக்கை விடுவதும், பேட்டி அளிப்பதும் வினோதமான விளையாட்டுத்தனமாகவும், கேலித் தனமாகவும் உள்ளது.
காட்டுக்குள் செல்வதை "பிக்னிக் போன்ற உல்லாசப் பயணம் செல்வது போல் நினைத்து விட்டார்கள். காட்டுக்குச் செல்ல தயாராக இருப்பதாகரஜினி சொன்ன போது, தமிழக டி.ஜி.பி. தாராளமாக போகலாம் என்று கிண்டலாக பதில் அளித்தார்.
அதற்கு பிறகு ரஜினியிடம் இருந்து எந்தவித பேச்சும் மூச்சும் இல்லை. அப்படியே அடங்கிப் போய் விட்டார். இதிலிருந்தே இவர்களுக்கு கடத்தல்சம்பவம் பற்றிய கொடூரமும் கடுமையும் தெரியவே இல்லை என்பது புலனாகிறது.
நாடாளுமன்ற உறுப்பினரான நடிகை ஜெயப்பிரதா, வீரப்பனை தானே நேரில் சந்தித்து "ராக்கி கட்டுவதாகச் சொன்னார். இதுபோன்ற கேலிக்கூத்தான பேச்சுக்களும், வீரப்பனிடம் தங்களின் தோழமையை காட்டிக் கொள்வது என்பதும், தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் தங்களின் சுயவிளம்பரத்திற்கு தான் உதவும்.
வீரப்பனுக்கும், அவனது கோஷ்டிகளுக்கும் முடிவு கட்டும் எண்ணம் தமிழக மற்றும் கர்நாடக முதல்வர்களுக்கு இருக்குமேயானால் அதிரடிப்படைகளை அனுப்பி அவனை சுட்டுத் தள்ள வேண்டும்.
இதை நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்ற போதே அவனை பின் தொடர்ந்து அதிரடிப் படையை அனுப்பி சாதித்திருக்க வேண்டும். இல்லையேல் இருமாநில முதல்வர்களும் பதவி விலக வேண்டும்.
இரு மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
நக்கீரன் கோபால் மீதே கிரிமினல் குற்றம் உள்ளது. அவரே ஒரு பிளாக்மெயில் ஆசாமி. வீரப்பன் பெயரைச் சொல்லி மிரட்டியே காசு பறிக்கும்ஏஜென்ட்.
அத்தகைய நிருபருக்கு இரு மாநில அரசுகளும் தூதர் அந்தஸ்து அளித்து ஊக்கம் அளிப்பது கேவலமானதாகும். தன் மீதுள்ள கிரிமினல் வழக்குகளை வாபஸ்பெற்றால் தான் வீரப்பனிடம் தூது போக முடியும் என்று கோபால் கூறியதை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டதும் கேவலமானது.
வீரப்பன் புகழ் பாடி சில பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் இந்த சமுதாயத்திற்கு தீய சேவையே புரிந்திருக்கின்றன. வீரப்பன் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இதுபோன்ற மோசமான தீய சக்திகள் தலை தூக்கும்.
எந்த முக்கிய பிரமுகர்களும் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியாத நிலைமை உருவாகும். இதையெல்லாம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஒதுங்கிநின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது அவமானகரமானச் செயல் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.