காஷ்மீரில் அமைதியாக நடந்த சுதந்திர தினவிழா
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கிடையே சுதந்திரதினவிழா மிக அமைதியாகக் கொண்டாடப்பட்டது.
பக்ஷி மைதானத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே முதல்வர் பரூக் அப்துல்லா தேசியக் கொடி ஏற்றினார். அதே போல் எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி.விஜயகுமார் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த லால் சவுக்கில் கொடியேற்றினார்.
சுதந்திர தினதன்று மாநிலத்தில் எந்த அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். காஷ்மீரில் குண்டு வெடிப்பு போன்ற எந்தஅசம்பாவிதச் சம்பவமும் நடக்காதவாறு போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
ஸ்ரீநகரில் ஹூரியத் அமைப்பினர் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் வணிக மையங்கள் அனைத்தும் மூடியே கிடந்தன. சாலைகள் பஸ்போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தன.
ஜம்முவில் கல்வி அமைச்சர் முகமது ஷபி அங்குள்ள சிறிய மைதானத்தில் கொடியேற்றினார். அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால் மிகக்குறைவான அளவிலேயே பொதுமக்கள் அங்கு வந்திருந்தனர்.
காட்டுவா, ராஜோரி, பூஞ்ச், உதம்பூர், தோடா பகுதிகளில் சுதந்திரதின விழா மிகவும் அமைதியாகக் கொண்டாடப்பட்டது. எந்த அசம்பாவிதச்சம்பவமும் நடக்கவில்லை.
யு.என்.ஐ.