ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் "அசத்திய தமிழக மாணவர்கள்
சென்னை:
1999---ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற மத்திய நிர்வாகப் பணிகளுக்கான அனைத்திந்தியத் தேர்வுகளில் தமிழகத்திலிருந்து 32 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
அவர்களில் 10 பேர் ஐ.ஏ.எஸ். பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர், அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ள முதல் பத்துபேரில் மூவராக திகழ்கின்றனர்.
இந்த ஆண்டிற்கான ஐ.ஏ.எஸ். பதவிக்குரிய காலி இடங்கள் 56 மட்டுமே. இதை எண்ணும்பொழுது தமிழக மாணவர்கள் பெற்றுள்ள தேர்ச்சி மிகவும்பாராட்டத்தக்கது.
சாதனை படைத்த ஐ.ஏ.எஸ். மாணவர்கள் அனைவரும் முதல்வர் கருணாநிதியை வியாழக்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அப்போது அவர்களுக்கு தங்களுடைய பணிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்று முதல்வர் வாழ்த்துக்கள் கூறியதோடு, ஏழை எளியவர்களுக்காகவும்,வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தொண்டாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இத்தகவலை தமிழக அரசின் செய்திக்குறிப்புத் தெரிவித்துள்ளது.