சர்ச்சுகளில் குண்டு வெடிப்பு - விமானப் படை அதிகாரி கைது
பெங்களூர்:
கர்நாடக, ஆந்திரா மற்றும் கோவா மாநிலங்களில் சர்ச்சுகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்.) அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இது குறித்து கர்நாடக டிஜிபி தினகர் கூறியதாவது:
இந்திய விமானப் படையில் ஜூனியர் வாரன்ட் அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் 50 வயதான சயத் ஹசன்-உர்-சாமா. இவருக்கும் கர்நாடகா,ஆந்திரா, கோவா மாநிலங்களில் நடந்த சர்ச் தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் உள்ள சில அமைப்புகளுக்கு அவர் உளவாளியாகச் செயல்பட்டுள்ளார். இவர், தென் மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களான ராணுவஅலுவலகங்கள், ரயில்வே பாலங்கள் போன்றவை குறித்து அந்த அமைப்புகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
தனக்கும் தொடர் குண்டுவெடிப்புகளுக்கும் தொடர்பு இருப்பதை சயத் ஹசன்-உர்-ஸாமா விசாரணையின்போது ஒப்புக் கொண்டுவிட்டார்.
கர்நாடக மாநிலத்தில் பணியாற்றி வந்த ஸாமாவின் சொந்த ஊர் ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்கோன் என்ற ஊராகும். அங்கு ஸாமா கைதுசெய்யப்பட்டார்.
இந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பங்கள் தொடர்பாக ஸாமா உள்பட இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தீன்தார்சன்னபஸவேஷ்வரா அஞ்சுமான் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றார் தினகர்.
ஜூன் 8, ஜூலை 8 மற்றும் 9 தேதிகளில் கர்நாடகத்தில் பெங்களூர், வாடி, ஹூப்ளி மற்றும் கோவா, ஆந்திர மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் சிலர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.