கோவை கலவரம் ...11 பேருக்கு ஆயுள் தண்டனை
கோவை:
கோவை கலவரத்தின்போது 4 பேரை எரித்துக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1997-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி போலீஸ்காரர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மறுநாள் கோவையில் பெரும்கலவரம் ஏற்பட்டது.
இக் கலவரத்தின்போது காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்த ஒரு பிரிவினர் மீது தாக்குதல் நடந்தது.
உருட்டுக் கட்டைகளாலும், பிற ஆயுதங்களாலும் தாக்கப்பட்ட அவர்களில் ஆரிப், ஆசிப், ஹபீப் ரஹ்மான், லியாகத் அலிகான் ஆகிய 4 பேர் பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச் செயலாளர் அதிரடி ஆனந்தன், நாகராஜ், உள்பட 14 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
கோவை இரண்டாவது முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இவ் வழக்கில் நீதிபதி பூபாலன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், பொதுச் செயலாளர் அதிரடி ஆனந்தன், நாகராஜ் ஆகியோர்விடுதலை செய்யப்பட்டனர். மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயுள் தண்டனையுடன் பொது இடத்தில் சட்டவிரோதமாக கூடியதற்காக 11 பேருக்கும் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இருதண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.