ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
மர்மான்ஸ்க் (ரஷியா):
ஆர்க்டிக் கடல் பகுதியில் மூழ்கிய ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் இருப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப் பணியில் ரஷ்ய மீட்புக்குழுவினர் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்யாவைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அணு சக்தியால் இயங்கக்கூடியது. இதில் 118 பேர் இருந்தனர். ஆர்க்டிக் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தஇக் கப்பல் திடீரென்று மூழ்கத் தொடங்கியது.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், கடலுக்கு அடியில் சென்று பார்த்தபோது அக் கப்பலின் முன் பக்கம் பலத்த சேதமடைந்திருந்ததைக் கண்டனர்.
எதிரே வேறொரு நீர் மூழ்கிக் கப்பலுடனோ அல்லது வேறு ஏதாவது அடையாளம் தெரியாத வலுவான பொருளுடனோ இக் கப்பல்மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
மூழ்கிய அக் கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்கு அடியில் உள்ள மணலுக்குள் புதைந்து வருகிறது. இன்னும் அக் கப்பலுக்குள் சிக்கியுள்ள 118பேரில் ஒருவர் கூட உயிருடன் மீட்கப்படவில்லை.
கப்பலுக்குள் இருப்பவர்கள் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் இருப்பும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்குத்தேவையான ஆக்ஸிஜனே கப்பலுக்குள் இருப்பதாகத் தெரிகிறது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப் பணியில் ரஷ்யாவுக்கு உதவியாக பிரிட்டன், நார்வே நாட்டு மீட்புக்குழுக்களும் ஈடுபடவுள்ளன. இக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு சனிக்கிழமைதான் சென்று சேரும் என்று கூறப்படுகிறது.
மூழ்கிய நீர் மூழ்கிக் கப்பலுக்குள் இருப்பவர்களை மீட்க அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று ரஷ்ய துணைப் பிரதமர் ஐல்யகிளேபனோவ் தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான கப்பலுக்கும் மீட்புக் குழுவினருக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. கப்பலுக்குள் தற்போதைய நிலைமைஎன்னவென்று தெரியவில்லை.
இதற்கிடையே, கப்பலுக்குள் இருந்தவர்களில் 90 பேர் மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.