ஜாமீனில் விடுதலையாக தமிழ்த் தீவரவாதிகள் மறுப்பு
சென்னை:
ஜாமீனில் விடுதலையாக மாட்டோம் என்று வீரப்பன் கோரியுள்ள ஐந்து தமிழ்த் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.
வீரப்பனின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சிறையில் உள்ள ஐந்து தமிழ் தீவிரவாதிகளை விடுதலை செய்ய முன்வந்துள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்ஆர்.சங்கரசுப்பு என்பவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் பேசினார்.
திருச்சி ஜெயிலில் இருக்கும் வெங்கடேசன் , சத்யமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் ஆகிய நான்கு பேரையும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினேன்.அப்பொழுது, அவர்கள், ஜாமீன் மனு தாக்கல் செய்து நாங்கள் விடுதலையாக மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
தங்கள் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யக்கூடாது என்றும் வேறு யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்றும்அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
தங்கள் மீது தொடரப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் வாபஸ் பெற்று, நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.சேலம் சிறையில் இருக்கும் இன்னொரு கைதியான பொன்னி வளவனும் இதே கோரிக்கையைத்தான் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
தங்களை விடுதலை செய்து காட்டுக்குள் அழைத்துச்செல்லும் பொழுது பத்திரிகை நிருபர்கள் சிலரையும் உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும்வெங்கடேசன், சத்யமூர்த்தி, முத்துக்குமார், மணிகண்டன் ஆகியோர் நிபந்தனை விதித்துள்ளனர் என்றார் வழக்கறிஞர் சங்கர சுப்பு.