மூப்பனாருக்கு முதல்வர் பதவி - ஜெ.வுக்கு ஜெயில் என்கிறார் சுவாமி
சென்னை:
தமிழக முதல்வராக மூப்பனார் பதவியேற்பார். ஜெயலலிதா ஜெயிலுக்கு போவார் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற ஜனதா கட்சிப் பொதுக் கூட்டத்தில் சுப்ரமணியன் சுவாமி பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை தீர்மானத்தின்போது த.மா.கா உறுப்பினர்கள் 3 பேர் எதிர்த்து ஓட்டுப் போட்டதால் பா.ஜ.க அரசு கவிழ்ந்தது.
மூப்பனார் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அன்றைக்கு பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து பதவிகளை வாங்கி இருக்கலாம். ஆனால், அப்படிசெய்யவில்லை. அந்த நன்றியை மக்கள் மறக்கக் கூடாது.
அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்காக தமிழ்நாட்டில் புதிய அணியை உருவாக்க வேண்டும். மூன்றாவது அணி நிச்சயம் உருவாகும்.மூப்பனார் முதல்வராக வருவார். ஜெயலலிதா ஜெயிலுக்கு போய் விடுவார். இதை யாரும் தடுக்க முடியாது.
மதுரை மக்களுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். இப்போது அடுத்த கட்ட போராட்டத்துக்கு தயாராகி விட்டேன். மதுரையில் உள்ள 6சட்டமன்றத் தொகுதிகளிலும் ஜனதா கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் ஜனதா கட்சிதான் ஆட்சி அமைக்கும். ஏனென்றால்அடுத்த தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சரியாக அக்கறை காட்டவில்லை. வீரப்பனிடம் இரு மாநில அரசுகள் மண்டியிட்டுகிடப்பது கேவலமானது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications