அரசியலுக்கு முழுக்குப் போடுகிறார் மு.க. அழகிரி
மதுரை:
கட்சித் தலைமை தன்னை உதாசீனப்படுத்தி விட்டதாகக் கூறி அரசியலில் இருந்தும், தி.மு.க.விலிருந்தும் விலகிவிடப் போவதாகக் கூறியுள்ளார் முதல்வரின்மகன் மு.க.அழகிரி.
தி.மு.க.வில் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினரில் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் பலம் வாய்ந்த தலைவர்களாக உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் சென்னை நகர மேயராகவும், இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். ஆனால் அழகிரிக்கு தனிப்பட்ட பதவிகள் எதுவும்தரப்படவில்லை.
ஆனாலும் அழகிரி தென்மாவட்டங்களில் கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். முரசொலி நாளிதழின் மதுரைப் பதிப்புத் துவக்கப்பட்டபோது அதைக் கவனிப்பதற்காக 1980 ம் ஆண்டு மதுரை வந்தார் அழகிரி.
அவர் முதல்வரின் மகன் என்பதால் மதுரையில் உள்ள தி.மு.க.பிரமுகர்கள் பலர் அழகிரியுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டனர். முக்கியப்பொறுப்புக்களைப் பெறுவதற்கு அழகிரியின் சிபாரிசை நாடினார்கள் தி.மு.க.வினர். அவர்களுக்கு அந்தப் பொறுப்புக்கள் கிடைக்கத் துவங்கியதை அடுத்துதென்மாவட்டங்களில் அழகிரியின் செல்வாக்கு வளரத் துவங்கியது.
அதன்பிறகு தென்மாவட்ட தி.மு.க.வின் முக்கியத் தலைவராக உருவெடுத்தார் அழகிரி. இதற்கிடையே கட்சி நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக கட்சிமேலிடத்துடன் சமீப காலமாக அழகிரிக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியலில் இருந்தும், தி.மு.க.விலிருந்தும் விலகப் போவதாக அறிவித்துள்ளார் அழகிரி.
ம.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வில் இணைந்த மதுரை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரின் வீட்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
ஒவ்வொரு தேர்தலின் போதும், தி.மு.க.வின் வெற்றிக்காக நான் கடுமையாக உழைத்தேன். கட்சியின் வெற்றிக்காகவும், வளர்ச்சிக்காகவும்பாடுபட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் தொடர்ந்து கட்சி மேலிடம் என்னை உதாசீனம் செய்கிறது. இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்று கூறி தேம்பி தேம்பிஅழுதார்.
அழகிரியின் இந்த திடீர் அறிவிப்பை எதிர்பாராத அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் தனது முடிவிலிருந்து மாறப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அழகிரியின் இந்த அறிவிப்பு அவரதுஆதரவாளர்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொதித்துப்போன ஆதரவாளர்கள்:
அழகிரியின் இந்த அறிவிப்பால் அவரது ஆதரவாளர்கள் மதுரையில் பஸ் ஸ்டாண்ட் அருகே மறியல் மற்றும் தீக்குளிப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அவர்களைப் போலீஸார் தடுத்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications