இன்று மாலைக்குள் தகவல் வரும் .. முதல்வர்
சென்னை:
காட்டில் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசு தூதர் நக்கீரன் கோபாலிடம் இருந்துபுதன்கிழமை மாலைக்குள் முக்கியத் தகவல் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தமிழகமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
வீரப்பனின் கடத்தல் விவகாரம் தொடர்பாக புதன்கிழமை அவர் கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். பேட்டி வருமாறு:
கேள்வி: வீரப்பனிடம் இருந்து கேசட் எதுவும் வந்துள்ளதா?
பதில்: கேசட் எதுவும் வரவில்லை. வீரப்பனுடன் கோபால் பேசி வருகிறார். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது.
கேள்வி: வீரப்பன் புது கோரிக்கை எதுவும் விடுத்துள்ளாரா?
பதில்: புதிய கோரிக்கைகள் எதையும் விடுக்கவில்லை.
கேள்வி: தமிழகத்தில் உள்ள 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் தான் இழுபறிக்கு காரணமா?மத்திய அரசிடம் இருந்து இதற்கு அனுமதி வந்து விட்டதா இல்லையா?
பதில்: மத்திய அரசிடம் இருந்து அனுமதி வந்து விட்டது. ஆனால், அதை நாங்கள் தான் பயன்படுத்தாமல்இருக்கிறோம். காட்டில் இருக்கும் கோபால் தொடர்பு கொள்ள வசதி இல்லை. புதன்கிழமை அவரிடம் இருந்துமுக்கியத் தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் குண்டு வைத்த போதே தீவிரவாதிகளுக்கும், வீரப்பனுக்கும்தொடர்பு இருந்த தகவல் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறதே?
பதில்: இதுபோன்ற நிறைய தகவல்கள் வெளியாகி உள்ளன. அது பற்றி பேச இப்போது நேரமில்லை.
கேள்வி: கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசினீர்களா?
பதில்: நானும் அவருடன் பேசி வருகிறேன். அவரும் என்னுடன் இப்பிரச்னை பற்றி பேசி வருகிறார்.
கேள்வி: தீவிரவாதிகளை விடுவிக்கக் கூடாது என்று ஜெயலலிதா சொல்கிறாரே?
பதில்: ராஜ்குமார் உயிர் பிரச்னை தான் இதில் முக்கியம். ஜெயலலிதா போன்றவர்கள் இதுபோன்ற முக்கியப்பிரச்னையை கெடுக்கிற மாதிரி பேசக் கூடாது. கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையும், தமிழகத்தில்வாழும் கன்னடர்கள் வாழ்க்கையும் இதில் அடங்கியுள்ளது. எனவே பத்திரிக்கைகள் கூட செய்திகள்வெளியிடும்போது கட்டுப்பாட்டுடன் வெளியிட வேண்டும்.
கேள்வி: கோபாலிடம் இருந்து எப்போது தகவல் வரும்?
பதில்: புதன்கிழமை மாலைக்குள் தகவல் வரும்.
கேள்வி: தடா கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதே?
பதில்: நான் கூடாது என்று நினைக்கிறேன். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவுசெய்துள்ளோம்.
கேள்வி: குமாரமங்கலம் மறைவுக்கு அஞ்சலி செலுத்த டெல்லி செல்லவில்லையா?
பதில்: அவர் மறைந்த தகவல் காலை 6 மணிக்குத் தான் கிடைத்தது. அதனால் என்னால் செல்ல முடியவில்லை.டெல்லியில் தி.மு.க சார்பில் மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் அஞ்சலி செலுத்துவார்கள்.
கேள்வி: 11வது நிதிக்குழு பரிந்துரைகள் தொடர்பாக டெல்லியில் சந்திரபாபு நாயுடு கூட்டிய முதல்வர்கள்கூட்டத்தில் மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுபற்றி?
பதில்: இதுபோன்ற முதல்வர்கள் கூட்டம் கூட்ட வேண்டிய தேவையில்லை. அப்படி தேவையில்லை என்பதால்அதிலே எனக்கு ஈடுபாடு இல்லை என்று பொருள் அல்ல. வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதிலும்தவறு இல்லை. வளர்ச்சியடையாத மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதிலும் தவறில்லை. தமிழகத்தைபொருத்தவரையில் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக செலவிட்டுள்ளோம்.
கேள்வி: சென்னைக்கு கிருஷ்ணா நீர் எப்போது வரும்?
பதில்: விரைவில் வரும் என்றார் முதல்வர் கருணாநிதி.