3-வது அணி என்பது வெறும் மாயை என்கிறார் வாழப்பாடி
சென்னை:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமையும் என்று கூறி தமிழ் மாநில காஙகிரஸ் தலைவர் மூப்பனார் மாயையை ஏற்படுத்தி வருகிறார் என்று ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
வாழப்பாடி ராமமூர்த்தி கும்பகோணத்தில் அளித்த பேட்டி வருமாறு:
அரசியலில் தற்போது எனக்கு ஓய்வு கிடைத்துள்ளது. கிடைத்துள்ள ஓய்வை சமுதாய பணிக்காக செயல்படுத்தி வருகிறேன்.
சந்தன வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கை சரியானது தான். இந்த நேரத்தில் ஜெயலலிதா போல் பொறுப்பற்றமுறையில் பேச நான் தயாராக இல்லை. ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட பிறகு வீரப்பனை சுட்டு தள்ள வேண்டும் என்று சொல்வதில் நான் கூட முதல்ஆளாக இருக்கலாம். அப்படி சொல்லி காரியத்தை கெடுக்க விரும்பவில்லை.
தமிழக அரசியலில் வருகிற ஜனவரியில் சுறுசுறுப்பு துவங்கி விடும். ஜனவரிக்கு பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். அப்போதும் நான் தி.மு.ககூட்டணியில் நீடிப்பேன். ஆனால், ராமதாஸ் நீடிப்பாரா என்பது தெரியாது.
தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற மாயையை மூப்பனார் ஏற்படுத்தி வருகிறார். அவர் கூறுவது போல் மூன்றாவது அணி ஏற்படாது.காங்கிரசுக்கும் த.மா.கா.வுக்கும் இடையே நல்ல உறவு இல்லை. கோவையில் சோனியா பங்கேற்ற கூட்டத்திற்கு மூப்பனாரை அழைக்கவில்லைஎன்பதில் இருந்து இதை தெரிந்து கொள்ளலாம் என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.