குமாரமங்கலம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை:
மத்திய மின் துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு. கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
48-வது வயதிலேயே மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மறைந்தார் என்ற செய்தி, துயரத்தின் உச்சத்திற்கே அனைவரையும் கொண்டுசெல்லக் கூடியதாகும்.
நல்ல நிர்வாகத் திறன் படைத்த மத்திய அமைச்சராக - நல்ல செயலாற்றல் படைத்த நாடாளுமன்ற உறுப்பினராக - அனைத்துக்கும் மேலாகபழகுதற்கினிய நல்ல நண்பராக விளங்கியவர் ரங்கராஜன்.
மத்திய அமைச்சரவையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த துறை குறித்துச் சொல்ல வேண்டுமேயானால் அத் துறையுடன் அவர் ஐக்கியமாகிஇருந்தார் என்றே சொல்லவேண்டும்.
அத் துறையின் வளர்ச்சிக்காவும், அத் துறையின் மூலம் நாட்டில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம் குறித்தும் அவர் சிந்திக்காத நேரமில்லை.
புகழ் பெற்ற ஓர் அரசியல் குடும்பத்துப் பிள்ளையாகத் தோன்றி, புகழுடன் திகழ்ந்த காலகட்டத்தில் அவர் மறைந்தது மிகப்பெரும் இழப்பாகும்.
அவருடைய குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியிருந்தார்.