ஒலிம்பிக் அணிவகுப்பு .. தேசியக் கொடி ஏந்திச் செல்வார் பயஸ்
டெல்லி:
சிட்னியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் முதல் நாள் அணிவகுப்பில் தேசியக் கொடியை டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஏந்திச்செல்கிறார்.
இத்தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் 15-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.
ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய அணிக்கு லியாண்டர் பயஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
துவக்க நாளன்று நடைபெறும் அணிகள் அணிவகுப்பில் இந்திய அணியை தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு லியாண்டர் பயஸ் வழிநடத்திச் செல்கிறார்.
ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் வீரர் ஒருவர் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுதான் முதன் முறையாகும்.
சர்வதேச போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு பயஸுக்கு இரண்டாவது முறையாகக் கிடைத்துள்ளது.
1998 பாங்காக் ஆசியப் போட்டியில் அவருக்கு முதன்முறையாக அந்த வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அப் போட்டியில் அவர் கலந்து கொள்ளாததால்,தேசியக் கொடியை ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை ஏந்திச் சென்றார்.