வன்முறையற்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு புத்த தலைவர்கள் அழைப்பு
கொழும்பு:
இலங்கையில், பொதுத்தேர்தல் பிரச்சாரத்தை அமைதியான முறையில் மேற்கொள்ள புத்த மதத் தலைவர்கள் வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நான்கு பெரிய புத்த மதப் பிரிவுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை விவரமாவது:
இலங்கையில் பொதுத்தேர்தலுக்கு மனுத்தாக்கல் வரும் 28 ம் தேதி முதல் செப்டம்பர் 4 ம் தேதி வரை நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளஇந்நிலையில் வன்முறைச் சம்பவங்களும் நடக்கின்றன.
மனுத்தாக்கல் ஆரம்பிக்கும் முன்பே வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுவது வருத்தமளிக்கக் கூடிய விஷயமாகும். இந்த வன்முறைச் சம்பவங்களால்அப்பாவிப் பொதுமக்கள் தான் கொல்லப்படுகிறார்கள் என்பதை பதவிவெறி பிடித்த அரசியல் தலைவர்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தல் பிரச்சாரம் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின் வரும் அக்டோபர் 10 ம் தேதி பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலைநகர் கொழும்பில் இடது சாரி மக்கள்விடுதலை முன்னணித் தொண்டர் ஒருவர் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அதேபோல் சந்திரிகா அரசை குற்றம்சாட்டிய முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்.அதைத்தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.