இந்து முன்னணி பிரமுகர் வாயில் விஷம் ஊற்றிக் கொலை
சென்னை:
கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இந்து முன்னணிப் பிரமுகர் வாயில் விஷம் ஊற்றிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக மூன்று பேரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பாடியில் வசித்து வந்தவர் மணிபாபு. வயது 35. இவர் பாடி பகுதி இந்து முன்னணி அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவரது மனைவி ஜோதி. திருமணமான சில நாட்களிலேயே இவரது மனைவி, தனக்கும், மணிபாபுவுக்கும் திருமணப் பொருத்தம் சரியில்லை என்று கூறிதனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இதற்குப் பின் மணிபாபு, ராஜகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு முன்பு மணிபாபு, தன் இரண்டாவது மனைவி ராஜகுமாரியின் தாய் அருணாவிடம் ரூ 25 ஆயிரம் பணம் கொடுத்ததாகத் தெரிகிறது.
தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு மணிபாபு, அருணாவிடம் கேட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ராஜகுமாரியின் தாய் அருணா, தம்பி ராஜா, அவரது மனைவி செல்வி ஆகியோர் கோபமடைந்தனர்.
பின்னர் சம்பவத்தன்று மூன்று பேருமாகச் சென்று மணிபாபுவைக் கட்டிப்போட்டு அவர் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டுத் தப்பித்து விட்டனர்.
அவர் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்துத் தப்பித்தார். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை கட்சி அலுவலகத்துக்கு வந்து இதுகுறித்துக் கூறினார். உடனடியாக அவர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார். இதுகுறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.