அமைச்சர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க குழு
சென்னை:
தி.மு.க.அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிக்கவிசேஷ குழு ஒன்றை அமைக்குமாறு சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க.வக்கீல் பிரிவின் மாநிலச் செயலாளர் பிலிப் தாமஸ். இவர் தி.மு.க.அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்,காதித்துறை முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பட்டாச்சார்யா, குறளகத்திலுள்ள காதி பட்டு விற்பனைமைய கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தொடர்ந்துள்ள வழக்கு குறித்த விவரம் வருமாறு:
அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அஜய் பட்டாச்சாரியா ஆகியோரின் உத்தரவுப்படி காதித்துறையில்சீனிவாசன் பல முறைகேடுகளை செய்துள்ளார். இதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் நடக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். அவர்கள் மூன்று பேரும், மூன்று கோடியே 56 லட்சம் ரூபாய் முறைகேடு செய்துள்ளனர். 98-99ம் ஆண்டு தணிக்கையின்போது முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தது.
இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தினால் தான் உண்மைகள் வெளிவரும். எனவே இந்தப் புகார் குறித்துவிசாரித்து சட்டப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்று பிலிப் தாமஸ் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி விஸ்வநாதன், இந்தப் புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்குறித்து முழு விசாரணை நடத்துவதற்காக டி.ஜி.பி.க்கு இந்த மனு அனுப்பப்படுகிறது.
குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் அடங்கிய விசேஷக் குழுவை டி.ஜி.பி.நியமிக்கவேண்டும். இந்த விசேஷக் குழுவுக்கு, எஸ்.பி.அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமை வகிக்கவேண்டும்.
குற்றச்சாட்டுக்களை விசாரித்து இரண்டு மாதங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்தார்.