வீரப்பன் மேலும் 5 நாட்கள் கெடு?
சென்னை:
வீரப்பன் விவகாரத்தின் உச்சகட்டமாக ராஜ்குமாரை விடுவிக்க மேலும் ஐந்து நாட்கள் கெடு விதித்துள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்படுவது போலவே, மைசூர் சிறையில் உள்ள 51 தமிழர்கள் மீதுள்ள வழக்குகளையும் கர்நாடக அரசுவாபஸ் பெற வேண்டும். ஜாமீனில் விடுவிக்கக்கூடாது என்றும் வீரப்பன் வற்புறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
இதுதவிர, 1991- ல் காவிரிப் பிரச்சனை சம்பந்தமாக பெங்களூரில் நடந்த கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட, இறந்த அனைவருக்கும் நிவாரண நிதிவழங்கப்பட வேண்டும் என்றும் உடனே 205 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறானாம் வீரப்பன்.
அரசு தூதராக சென்ற நக்கீரன் கோபால் இந்த முறை வீரப்பனை அவ்வளவு எளிதாக பேசவோ, சந்திக்கவோ முடியாததற்குக் காரணம், தமிழ்தீவிரவாதிகள்தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
வீரப்பனையும், கோபாலையும் சந்திக்க விட்டால் கோபால் பேசி ராஜ்குமாரை அழைத்துச் சென்று விடுவார் என்று நினைக்கிறார்களாம் தமிழ்த்தீவிரவாதிகள்.
இன்னும் காஸட்டில் உள்ள முழு விபரங்கள் வெளியே தெரிவிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசிய பின்பு, பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள்.