சிறுமிகள் விபச்சாரத்தைத் தடுக்க கமிட்டி"
கோவை:
சிறுமிகள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதைத் தடுக்க மாநில அரசு அளவிலான கமிட்டி ஒன்றை அமைக்க தமிழக அரசு ஆலோசித்துக்கொண்டிருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் சற்குண பாண்டியன் தெரிவித்தார்.
சிறுமிகள் கடத்தப்படுவது மற்றும் விபச்சாரத்திற்காக பிற மாநிலங்களுக்கு விற்கப்படுவது குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு கோவையில் நடந்தது.இந்தக் கருத்தரங்கில் தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளாவிற்கான யூனிசெப் பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சற்குண பாண்டியன் பேசியதாவது:
சிறுமிகள் ஏஜன்டுகள் மூலம் ஒரு மாநிலத்திலிருந்து கடத்தப்பட்டு, வேறு மாநிலங்களுக்குக் கடத்தப்படுவது, பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதுபோன்றவை வேதனையான விஷயமாகும். தமிழக அரசு இதைத் தடுப்பதற்காக மாநில அளவிலான கமிட்டி ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே, மாநில அரசு மாவட்ட ஆலோசனைக் கமிட்டி மற்றும் கிராமக் கண்காணிப்புக் கமிட்டிகளை அமைத்துள்ளது. மேலும் காணாமல் போனசிறுமிகள் தெருக்களில் ஆதரவின்றி இருக்கின்றார்களா அல்லது ஏதாவது மையங்களில் சேர்க்கப்பட்டு விட்டனரா? என்பது குறித்து விசாரிக்க காணாமல்போன சிறுமிகள் பீரோ என்ற அமைப்பை உருவாக்க மாநில அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார்.
தமிழ்நாடு, கேரள மாநிலங்களுக்கான யூனிசெப் பிரதிநிதி இஷாபிலே ஆஸ்டின் பேசுகையில், சிறுமிகளைக் கடத்துபவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகுந்ததண்டனை அளிக்க வேண்டும். மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு கல்வி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இந்தக் கருத்தரங்கில் சிறுமிகள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுப்பதோடு, சட்டத்தின் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துகடுமையான தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகையை அதிகரிக்க வேண்டும். அந்தச் சிறுமிகளுக்குத்தகுந்த ஆலோசனை வழங்குவதோடு அவர்களுக்கு எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வழிகாட்டவும் வேண்டும்.
தன்னார்வ நிறுவனங்கள், சமூக நலத்துறை மையங்கள், போலீஸார், தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றோர் சிறுமிகள் கடத்தப்படுவதைத் தடுக்கவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
யு.என்.ஐ.