அம்மாக்கள் தகராறில் மாணவியைக் கொன்ற சகோதரி
மதுரை:
துணி துவைக்கும் கல்லைப் பகிர்ந்து கொள்வதில் இரண்டு பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவர்களது மகள்கள் மோதிக் கொண்டனர்.இதில் 11 வயதான பள்ளி மாணவியை, அவரது ஒன்று விட்ட சகோதரியே அரிவாளால் வெட்டிக் கொன்றார்.
இச்சம்பவம் சிவகங்கை மாவட்டம் பனசக்கோட்டை பகுதியில் வியாழக்கிழமை மாலை நடந்தது. கொலையான சிறுமியின் பெயர் சரண்யா (வயது 11).இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தாள். இவரது ஒன்று விட்ட சகோதரி அமுதா (வயது 22). இவர்களது தந்தையர் இருவரும்சகோதரர்கள்.
சம்பவத்தன்று அமுதாவின் அம்மாவிற்கும், சரண்யாவின் அம்மாவிற்கும் துணி துவைக்கும் போது துவைக்கும் கல்லை பங்குபோட்டுக் கொள்வதில்தகராறு ஏற்பட்டது.
அமுதாவின் அம்மாவும், சரண்யாவின் அம்மாவும் நீண்டநேரம் சண்டை போட்டுக் கொள்வதைப் பார்த்த அமுதா ஆத்திரமடைந்து சரண்யாவை அரிவாளால்தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சரண்யாவைக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரண்யா சிகிச்சைபலனின்றி இறந்தார்.
இந்தச் சம்பவம் நடந்த போது அமுதா மற்றும் சரண்யாவின் அப்பாக்கள் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸார் அமுதாவையும், அவரது தாயார் சரசுவையும் கைது செய்தனர்.
யு.என்.ஐ.