தமிழ்நாடு விடுதலைப்படை தீவிரவாதி கைது
சென்னை:
விருத்தாசலத்தில் துப்பாக்கியுடன் திரிந்த தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியை போலீசார் கைது செய்தனர்.
சந்தன வீரப்பனுடன் சேர்ந்து செயல்படும் தமிழ் தேச மீட்புப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடமாட்டம் விருத்தாச்சலம் பகுதியில் அதிகம் உண்டு.
இப்போது கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு வீரப்பனுடன் சேர்ந்து இந்த தீவிரவாதிகள் பல நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
தமிழக சிறைகளில் இருக்கும் இந்த இயக்கத்தைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்பது தான் வீரப்பன் கும்பலின் முக்கிய நிபந்தனை.
இந்த நிபந்தனை காரணமாக திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
குறிப்பாக விருத்தாசலம் பகுதியில் இதற்காக தனிப் படை அமைக்கப்பட்டு ரோந்துப் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சேலம் ரோட்டில் தனிப்படையினர் ரோந்து சென்றபோது ஒரு இளைஞர் திடீரென்று யாரும் பார்த்து விடாத வகையில் ஓடினார். ஆனால்,போலீசார் துரத்திப் பிடித்து அவரை கைது செய்தனர். அவரிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. பின்னர் நடந்த விசாரணையில் அவர் பெயர் அசோக்குமார்(வயது 19) என்றும், இங்குள்ள விருத்தாம்பிகை நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
இவர் சமீபத்தில் தமிழர் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளார். வல்லம் அறிவழகன் தலைமையிலான தீவிரவாதக் கோஷ்டியில்செயல்பட்டுள்ளார். இந்த கும்பலை சேர்ந்த எல்லோருக்கும் துப்பாக்கிகள் தரப்பட்டுள்ன என்பதும் தெரிந்தது.