தீப்பெட்டி தொழிலை இயந்திரமயமாக்காதீர்...கருணாநிதி
சென்னை:
தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலை இயந்திரமயமாக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்குஎழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிரதமர் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முரசொலி மாறனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் திருநெல்வேலி, வேலூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் தீப்பெட்டி தொழில் நடந்து வருகிறது.
இந்தத் தொழிலை நம்பி 7 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தீப்பெட்டி தொழிலைஇயந்திரமயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மத்திய அரசின் இந்த ஆலோசனையால் தீப்பெட்டி தொழிலுக்கு அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
காட்"ஒப்பந்தப்படி, தீப்பெட்டி தொழிலை அரசு பாதுகாப்பதுடன், பொருட்களைக் குவிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும், தீப்பெட்டிப் பொருட்களுக்கானசுங்கத் தீர்வையை உயர்த்த வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
முன்னதாக, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் மற்றும் வர்த்தகஅமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
யு.என்.ஐ.