சிங்கப்பூர் கிரிக்கெட்: பாக்.கை வீழ்த்தி கோப்பையை வென்றது தெ.ஆ.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் சேலஞ்ச் கிரிக்கெட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா கோப்பையை வென்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. மழையின் காரணமாக ஆட்டம் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. 35 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது.
கேரி கிர்ஸ்டன் 62 ரன்களும், நிக்கி போயே 54 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் கபிர் கான், அப்துர் ரஸாக் இருவரும் தலா இருவிக்கெட்டுகளை வீழ்த்தினார்.
35 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் தனது இன்னிங்ஸைப் பாகிஸ்தான் தொடங்க இருந்தது. அப்போது மழைபெய்தது. இதையடுத்து பாகிஸ்தானின் இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
புதி விதிகளின்படி 35 ஓவர்களில் 215 ரன்கள் எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த கடினமான இலக்குடன் தனதுஇன்னிங்ஸைப் பாகிஸ்தான் தொடங்கியது.
தென் ஆப்பிரிக்க வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் ரன் எடுக்க பாகிஸ்தான் சிரமப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் விக்கெட்டுகள் தொடர்ந்துவீழ்ந்தபடி இருந்தது.
இதனால், 28.1 ஓவரில் 121 ரன்களுக்குப் பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. இதையடுத்து 93 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுகோப்பையை வென்றது.
இந்த ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக நிக்கி போயேவும், தொடரின் சிறந்த ஆட்டக்காரராக கேரி கிர்ஸ்டனும் தேர்வு செய்யப்பட்டனர்.