கிப்ஸ், வில்லியம்ஸுக்கு 1 ஆண்டு தடை
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கிப்ஸ் மற்றும் வில்லியம்ஸ் இருவருக்கும் இந்த ஆண்டு இறுதி வரை கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியேவுடனான மேட்ச் பிக்ஸிங்கில் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததை அடுத்து இத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மைக்கேல் குபெர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மூன்று பேர் கொண்ட ஒழுங்குக் கமிட்டி இத் தடை தொடர்பான அறிவிப்பைதிங்கள்கிழமை பிறப்பித்தது.
இது தவிர, அக்டோபர் 31-ம் தேதிக்குள் கிப்ஸ் 60 ஆயிரம் மதிப்புள்ள தென் ஆப்பிரிக்க கரன்சியையும் (ரான்ட்), வில்லியம்ஸ் 10 ஆயிரம் மதிப்புள்ளதென் ஆப்பிரிக்க கரன்சியையும் (ரான்ட்) அபராதமாகச் செலுத்தவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் உள் நாட்டுக் கிரிக்கெட்டில் விளையாட கிப்ஸுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்றார் குபெர்.
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குரோனியேவுக்கு கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு குறித்துஎட்வர்ட் கிங் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த கமிட்டியின் விசாரணைக்குப் பிறகுதான் குரோனியேவுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்று தெரியவரும்.
தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அப்போது கிரிக்கெட் சூதாட்டக்காரர்களுடன் சேர்ந்து மேட்ச்பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் கிப்ஸ், வில்லியம்ஸ், ஸ்டிரைடம் ஆகியோரும் குரோனியோவுடன் சேர்ந்து மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.
குரோனியே மீது கிங் கமிஷன் விசாரணை நடந்து வருவதால் மற்ற மூன்று பேர் மீதும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமே தனியாக விசாரணைநடத்தியது.
கிப்ஸ், வில்லியம்ஸ் இருவருக்கும் தடையும், அபராதமும் விதிக்கப்பட்டது. ஸ்டிரைடமுக்கு அபராதமோ, தடையே விதிக்கப்படவில்லை.