"வாஜ்பாயுடன் பேச்சு நடத்த முஷாரஃப்புக்கு உரிமை இல்லை"
டெல்லி:
இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கும், பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப்புக்கும் இடையே எந்தவிதமான பேச்சுவார்த்தையும்நடைபெறுவதற்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாயியுடன் பேச்சு நடத்த ராணுவ ஆட்சியாளர் முஷாரஃப்புக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று அவர்கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மேல்சபை முன்னாள் உறுப்பினரான கான் அப்துல் வாதூத் கான் என்பவர் இது தொடர்பாக முஷாரஃப்புக்கு அவர் எழுதியுள்ள பகிரங்ககடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் ஆட்சி நடத்தி வரும் பர்வேஸ் முஷாரஃப் ஒரு ராணுவ அதிகாரிதான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல.
அப்படியிருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் தலைவருடன் அவர் எப்படி பேச்சு நடத்த முடியும். அப்படி பேச்சு நடத்த அவருக்கு எந்தஅடிப்படை, தார்மீக உரிமையும் இல்லை.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதி நிலவவேண்டும் என்று விரும்பினால் அது குறித்து செயலர் அளவிலோ அல்லது ஏதாவது ஒரு ராணுவஅதிகாரி அளவிலோ பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு நடத்தலாம்.
அதற்கு முன்பாக எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதும், தீவிரவாத நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
பாகிஸ்தானுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பஸ் பயணம் சென்றது இரு நாடுகளுக்கும் இடையே 50 ஆண்டு பகை நீங்கவேண்டும் என்பதற்காகவும், இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படவேண்டும் என்பதற்காகவும்தான்.
ஆனால், இந்தியா மேற்கொண்டு வரும் அமைதித் திட்டங்களுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப்தான் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறார்.
காஷ்மீரில் தீவிரவாதிகளைத் தூண்டிவிடுவதும், கார்கில் பகுதியில் ஆயுதங்களைச் சப்ளை செய்ததும் போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் இஸ்லாமிய மதத்துக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாமிய மதச் சட்டப்படி இத்தகைய செயலுக்கு மரண தண்டனைதான.
லாகூர் பிரகடனம் பற்றி தனது நிலைமை பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரஃப் விளக்கவேண்டும்.
இரு நாட்டுக்கும் இடையே அமைதி ஏற்படுவதற்கான பல நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த போரின்போதுசிறைப்பிடிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் கைதிகளை இந்தியா விடுவித்தது. மேலும், அப்போரின் போது கைப்பற்றிய நிலப்பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது.
ஆனால், அப் போரின்போது பாகிஸ்தானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய ராணுவத்தினர் இன்னும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவும்இஸ்லாமிய மதச் சட்டத்துக்கு எதிரானது என்றார் வாதூத் கான்.
யு.என்.ஐ.