ஒலிம்பிக் 2008 ... நகரங்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைந்தது
லுசேன் (ஸ்விட்சர்லாந்து):
2008-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பும் நகரங்களின் எண்ணிக்கை 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
பீஜிங், பாரீஸ், டொரான்டோ, ஒசாகா, இஸ்தான்புல், பாங்காக், ஹவானா, செவெல்லி, கோலாலம்பூர் ஆகிய நகரங்கள் 2008-ம் ஆண்டின் ஒலிம்பிக்போட்டியை நடத்த விரும்பம் தெரிவித்திருந்தன.
ஆனால், ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பும் நகரங்களின் எண்ணிக்கையை 5 ஆகக் குறைக்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதன்படி பீஜிங், பாரீஸ், இஸ்தான்புல், ஒசாகா, டொரான்டோ ஆகிய 5 நகரங்கள் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த 5 நகரங்களில் இருந்து ஒரு நகரம் தேர்வு செய்யப்பட்டு அங்கு 2008-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.
கமிட்டி உறுப்பினர்கள் ஏகமனதாகவே கடைசி 5 நகரங்களின் பெயர்களைத் தேர்வு செய்துள்ளனர். பீஜிங் மற்றும் பாரீஸ் நகரங்களுக்கு அதிக ஆதரவுஇருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே பலமுறை ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து கடைசி நேரத்தில் வாய்ப்பை நழுவ விட்டதால் இஸ்தான்புல்லுக்கு இம் முறையும்போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கமிட்டி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
2000-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியிலும், 2004-ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் கிரீஸ் நாட்டில் உள்ளஏதென்ஸ் நகரிலும் நடைபெற உள்ளன.