கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்காரருக்கு அடி
சென்னை:
தனக்குக் கீழே பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதித்த போலீஸ்காரரை, பிற காவலர்கள் சேர்ந்து தாக்கினர்.
தமிழ்நாடு சிறப்புக் காவல்படை சி கம்பெனியில் உள்ள 3-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வருபவர் காமராஜ். வயது 27. இவர் கடந்த வாரம்வேலூரிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார்.
சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப் படைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதும் இவர்சில கட்டுப்பாடுகளை விதித்தார். இது மற்ற போலீஸாருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. எனவே இவற்றை பிற போலீஸார் மதிக்கவில்லை.
இதையடுத்து கோபமடைந்த காமராஜ் அவர்களைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிற போலீஸார், நீண்ட காலமாக சீனியராக பணியாற்றிவருகிறோம். எங்களுக்கே ஆர்டர் போடுகிறீர்களா என்று கூறியுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றி, மோதல் ஏற்பட்டது.
காமராஜை, போலீஸ்காரர்களில் சிலர் உருட்டுக்கட்டைகளால் தாக்கினர். படுகாயமடைந்த காமராஜ் அரசு பொது மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.