யாருடன் கூட்டணி .. திருச்சியில் புதிய தமிழகம் முடிவு
சென்னை:
சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி திருச்சியில் அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டில் முடிவுசெய்வோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் அவர் செவ்வாய் கிழமை அளித்த பேட்டி:
தென் மாவட்டங்களில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் தலித் மக்களுக்கு உரிய முறையில் செய்து தர வேண்டும்.
அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுகின்றனவா என்பதை கண்டறிய சட்டமன்ற உறுப்பினர்கள், சமுதாய நலனில் அக்கறையுள்ள நல்லமனிதர்களை கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இவற்றை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.அந்த இடங்கள் நிரப்பப்படும் வரையில் பொது மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் கீழ் வேலை வழங்குவதை அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் மினி பஸ்களை அரசு இயக்குகிறது. இதில் 50 சதவீதம் எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.