8 கி.மீ. தூரம் தறிகெட்டு ஓடிய யானை
தூத்துக்குடி:
8 கிலோமீட்டர் தூரம் தறிகெட்டு ஓடிய யானையால் தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் உயிருக்குப் பயந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
தூத்துக்குடியில் உள்ள ஒரு கோயிலில கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ் விழாவுக்கு திருநெல்வேலியில் இருந்து ஒரு யானை கொண்டு வரப்பட்டது.பலவேசம் என்பவர் யானைப் பாகனாக இருந்தார்.
கும்பாபிஷேகம் முடிந்து யானையை மீண்டும் திருநெல்வேலிக்கு பலவேசம் ஓட்டிச் சென்றார். யானை மீது உட்கார்ந்து செல்லாமல் யானைக்கு அருகிலேயேஅவர் நடந்து சென்றார்.
சிப்காட் பைபாஸ் சாலை அருகே யானையும் பாகன் பலவேசமும் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி பலவேசம் மீது மோதியது.இதில் பலவேசம் தெய்வாதீனமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இச் சம்பவத்தால் யானை திடீரென்று தறிகெட்டு ஓடியது.
மதம் பிடித்தது போல் யானை வேகமாக சாலையில் ஓடி வருவதைப் பார்த்த அப் பகுதி மக்கள் உயிருக்குப் பயந்து அலறி அடித்து பாதுகாப்பான இடங்களைநோக்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தறிகெட்டு ஓடிய யானை சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புதுக்கோட்டை என்ற இடத்துக்கு வந்துதான் நின்றது. பின்னர் அப்பகுதியில் இருந்தமக்கள் யானைக்கு உணவும், தண்ணீரும் கொடுத்து அமைதிப்படுத்தினர்.
பின்னர் யானை திருநெல்வேலிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இச் சம்பவம் குறித்து தட்டப்பாறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.