ராஜ்குமார் விவகாரம்: கார்கே-கருணாநிதி ஆலோசனை
சென்னை:
50 நாட்களை கடந்து காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன், கர்நாடகஅமைச்சர் மல்லிகார்ஜூனா திங்கள் கிழமை மாலை ஆலோசனை நடத்தினார்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் 50 நாட்களை தாண்டியும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருப்பதால், தமிழக பத்திரிகைகளில் அதற்குரியமுக்கியத்துவம் குறைந்து விட்டது.
ராஜ்குமார் கடத்தல் ஏற்படுத்திய பரபரப்பு குறைந்து, நரபலி சாமியார் கதை பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை செயலாளர் பிரகாஷ் ஆகியோர் திங்கள்கிழமை மாலை சென்னைவந்தனர். கோட்டையில் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் விடுவிக்கக் கோரும் 121 தடா கைதிகள், 5 தீவிரவாதிகள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்செவ்வாய்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதுதொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.