மதுரையில் பதற்றம் - 2 பஸ்கள் எரிப்பு
மதுரை:
மு.க.அழகிரி மீது தி.மு.க.நடவடிக்கை எடுத்துள்ளதைக் கண்டித்து மதுரையில் 2 பஸ்கள் எரிக்கப்பட்டன. போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
மு.க அழகிரியுடன் தி.மு.க.வினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சியில் செய்தி வெளியானதும் மதுரையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென்று பதற்றம் ஏற்பட்டது. 10 மணிக்கு ஒருகும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
அவனியாபுரம் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டது.
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனி அருகே இச்சம்பவம் நடந்தது. பஸ்சை மறித்து அக்கும்பல் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தது.
இதையடுத்து, பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பின்னர் பஸ் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் பஸ்சின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.
அதே போல், அவனியாபுரம் பை பாஸ் ரோட்டில் இன்னொரு பஸ்சை வன்முறைக் கும்பல் அடித்து நொறுக்கியது. அதற்குள் சம்பவ இடத்திற்குபோலீஸார் வந்து விட்டதால் பஸ் எரிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்த ஒரு அரசு பஸ்சை வன்முறைக்கும்பல் தீ வைத்து எரித்தனர். பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும்பதறி ஓடினர்.
இச்சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது. மதுரைக்கு எந்த பஸ்சும் வரவில்லை. மதுரையிலிருந்தும் எந்தபஸ்சும் வெளியூர்களுக்குப் புறப்பட்டுச் செல்லவில்லை.