சேலத்தில் மீண்டும் கன்னட எதிர்ப்பு நோட்டீஸ்கள்
சேலம்:
கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படும் கஷ்டங்களை 6 பக்க நோட்டீஸ்களில் அச்சடித்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர் வீரப்பனின்ஆதரவாளர்கள்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தமிழ் தீவிரவாதிகள் 5 பேர் மற்றும் மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 பேரை விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் நிபந்தனை விதித்துள்ளான்.
இரு மாநில அரசுகளும் இந்த நிபந்தனைப்படி, தடா கைதிகள் உள்பட பிற கைதிகளை விடுவிக்க ஒப்பதல் அளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட், கர்நாடகசிறையிலுள்ள வீரப்பனின் கூட்டாளிகளையும், தமிழக சிறைகளில் உள்ள நக்சலைட்டுகளையும் விடுவிக்க தடை விதித்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த வீரப்பனின் ஆதரவாளர்கள் சேலம், மேட்டூர், தாரமங்கலம், நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் நடிகர் ரஜனிகாந்த்தைத் தாக்கி 6பக்க நோட்டீஸ்களை ரகசியமாக அச்சடித்து வெளியிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது. கர்நாடக சிறையில் ஆண்டுக்கணக்கில் வாடும் தமிழர்கள் குறித்து யாரும் குரல் கொடுக்காமல், ஒருகன்னட நடிகர் சிறைப்பட்டதும் குரல் கொடுக்கிறார்களே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது இது. ராஜ்குமாருக்காக குரல் கொடுத்தவர்களைத்திட்டியும் அந்த நோட்டீஸில் வாசகங்கள் உள்ளன.
நோட்டீசின் முதல் பக்கத்தில் கர்நாடகத்தில் கதறும் தமிழர்கள் என்ற தலைப்பில் கட்டுரை ஆரம்பமாகிறது. கர்நாடக சிறையில் தமிழர்கள் படும்அவஸ்தை, பெண்களை மற்றவர்கள் கண் எதிரிலேயே கற்பழித்தல் கொடூரமான செயல்கள் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ளது.
கட்டுரையின் இறுதியில், வீரப்பன், சில வருடங்களுக்கு முன் 9 கன்னடர்களைக் கடத்தினான். அப்போது கர்நாடக அரசு, தனது அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவைத்து விட்டு, அவர்களை மீட்பதையே முதல் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டது.
தற்போது வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள ராஜ்குமார் என்ற ஒருவருக்காகப் போராடும் தமிழக-கர்நாடக அரசுகள், கர்நாடக சிறையில்அடைக்கப்பட்டுள்ள 130 கைதிகளை விடுவிப்பதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? அவர்களுக்காகக் குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்விஎழுப்பியுள்ளது.
நோட்டீசின் முடிவில், வள்ளுவன் மினி அச்சகம், மேச்சேரி என்ற முகவரியும் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளில் வீரப்பனின் கூட்டாளிகளானநக்சல்கள், தமிழர் மீட்சிப்படை ஆதரவாளர்கள் அதிகம் இருப்பதைப் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.