மாணவியைக் காப்பாற்ற பாம்பைக் கொன்ற நாய்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே குரும்பூர் பள்ளி மாணவியைக் கடிக்க வந்த நல்ல பாம்பை, நாய் கடித்துக் கொன்றது.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரையடுத்துள்ள பணிக்க நாடார் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருப்பவர் கணேசன். இவரது மகள் தீபா.
தீபா தூத்துக்குடியில் உள்ள இசைப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று தீபா தன் வீட்டின் பின் வாசலில் அமர்ந்து கொண்டு இசைப் பயிற்சி செய்து வந்தார்.அப்போது இசையைக் கேட்டதும் அங்கு நல்லபாம்பு வந்தது. பாம்பைப் பார்த்த தீபா பாம்பு, பாம்பு என்று அலறினார்.
தீபாவின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அவர்கள் வீட்டு நாய் ஓடி வந்தது. அவரது பெற்றோரும் அங்கு வந்தனர். அங்கு வந்த நாய் மோப்பம் பிடித்தபடிசென்று தென்னங்கீற்றுக்குள் பதுங்கியிருந்த பாம்பைக் கடித்தது. பாம்பும் படம் எடுத்து ஆடியது. நாய் ஆவேசத்துடன் பாய்ந்து அந்தப் பாம்பைக் கடித்துக்குதறியது.
பாம்பு அந்த இடத்திலேயே இறந்தது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஜூலி என்ற அந்த நாயின் நன்றி உணர்வைப் பாராட்டினார்கள்.