ரஷிய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார்
டெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.
மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் லலித்மான்சிங் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் நல்ல நட்புறவுடன் இருந்துவருகிறது. புடினின் தற்போதைய இந்திய வருகையினால் இந்த உறவு இன்னும் மேம்பாடடையும்.
பிற நாடுகளுடன் உள்ள உறவை விட இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் புரிந்துகொள்ளும் விதத்திலும், நட்புறவைப் பறைசாற்றும் வகையிலும் உள்ளதுஎன்றார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை செயலாளர் செர்கை பரிகோட்கோ புடினின் இந்திய வருகை குறித்துக் கூறுகையில், அனைத்துத் துறையிலும் இரு நாடுகளும்வளர்ச்சியடைய இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
புடினின் இந்திய வருகையின் போது, இரு நாட்டு உறவுகளும் வலுப்பட பொருளாதாரம், வர்த்தகம், ராணுவம், கலை, அறிவியல் தொழில்நுட்பம்,அணுசோதனை போன்ற 7 துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
சமீபத்தில் ரஷ்ய துணை பிரதமர் இலியா கிளபனோவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவின் அணு மின் சக்திக்கான அடிப்படைக் கட்டமைப்பில் 50சதவீத உதவியை ரஷ்யா வழங்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இதற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் வருகையின் போது கையெழுத்தாகும்.
இந்தியாவிலுள்ள தாராப்பூர் அணுமின்நிலையத்திற்கு எரிபொருட்கள் கொடுத்து உதவுவதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா முன்பே கையெழுத்திட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.